கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் : யார்-யாருக்கு பெண்கள் உதவித்தொகை? வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு


கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் : யார்-யாருக்கு பெண்கள் உதவித்தொகை? வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
x

தமிழக அரசு வழங்கும் ரூ.1,000 உதவித்தொகை யார்-யாருக்கு கிடைக்கும் என்று வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு உள்ளது. ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தி.மு.க. சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், 'பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்' என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. தி.மு.க. அரசு அமைந்த பின்னர், இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு இல்லத்தரசிகள் மத்தியில் அதிகரித்தது.

முதல் ஆலோசனை கூட்டம்

இதற்கிடையே தமிழ்நாடு அரசு கடந்த 2023-24-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்த திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டம் அண்ணா பிறந்தநாளான வருகிற செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த திட்டத்தை எவ்வாறு நடைமுறைக்கு கொண்டு வருவது? என்பது பற்றிய முதல் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் அமைந்துள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டார்.

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உதயச்சந்திரன், ககன்தீப் சிங் பேடி உள்பட அரசு துறை உயர் அதிகாரிகளும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர்டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் நேரடியாக கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டம் மதியம் 3 மணிக்கு தொடங்கியது.

கூட்டத்தில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விரிவாக தெரிவித்தார். இத்திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்று பெயர் சூட்டினார்.

வழிகாட்டு நெறிமுறை

இந்தநிலையில் ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி

குடும்ப தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 2002-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டதிற்கு பொது வினியோக நியாயவிலை கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலை கடை அமைந்திருக்கும் விண்ணப்ப பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்.

குடும்ப தலைவி வரையறை

குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக கருதப்படுவர். ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்ப தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்ப தலைவியாக கருதப்படுவார்.

குடும்ப அட்டையில் ஆண் குடும்ப தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த குடும்ப தலைவரின் மனைவி குடும்ப தலைவியாக கருதப்படுவார்.

திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவிகளாக கருதப்படுவர்.

ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்க செய்யலாம்.

பொருளாதார தகுதிகள்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் குடும்பங்களின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும்.

5 ஏக்கருக்கு குறைவாக நஞ்சை நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புஞ்சை நிலம் வைத்துள்ள குடும்பங்கள் ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3 ஆயிரத்து 600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.

பொருளாதார தகுதிகளுக்காக தனியாக வருமான சான்று அல்லது நில ஆவணங்களை பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க தேவையில்லை.

தகுதி இல்லாதவர்கள்

விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் ஆண்டுக்கு ரூ.2½ லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டினால் உரிமைத்தொகை பெற இயலாது.

அதேபோன்று ஆண்டு வருமானமாக ரூ.2½ லட்சத்துக்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி மற்றும் தொழில் வரி செலுத்துவர்களும் விண்ணப்பிக்க இயலாது.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் இதில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர) அதாவது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உரிமைத்தொகை பெற முடியாது.

சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற 4 சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள், ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள், ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினரும் விண்ணப்பிக்க இயலாது.

விதி விலக்குகள்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரை கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

இவர்கள் திட்டத்தின் பிற தகுதிகளை பூர்த்தி செய்து, எந்தவித தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லையெனில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.

இவ்வாறு வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.


Next Story