விபத்துக்குள்ளான காரில் ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


விபத்துக்குள்ளான காரில் ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 July 2023 6:53 PM GMT (Updated: 10 July 2023 6:53 AM GMT)

நாட்டறம்பள்ளி அருகே விபத்துக்குள்ளளான காரில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

சாலையில் கவிழ்ந்த கார்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூர்குப்பம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பனம்தோப்பு என்ற இடத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் கார் டிரைவர் காயமின்றி உயிர் தப்பி காருக்குள் இருந்து வெளியேறினார்.

பின்னர் காரில் இருந்து சிதறிய புகையிலை பொருளை (ஹான்ஸ் பாக்கெட்டுகள்) அவர் சேகரித்து கொண்டிருந்தார். அப்போது நாட்டறம்பள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

புகையிலை பொருள் பறிமுதல்

போலீசார் வருவதை பார்த்ததும் கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

விபத்தில் சிக்கிய கார் தமிழக பதிவெண் கொண்டதாகும். காரில் தடை செய்யப்பட்ட 385 கிலோ புகையிலை பொருள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் குறித்தும், புகையிைல பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story