சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 உயர்வு; வெங்காயம், பூண்டு ரூ.200-க்கு விற்பனை: பொதுமக்கள் அதிர்ச்சி


சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 உயர்வு; வெங்காயம், பூண்டு ரூ.200-க்கு விற்பனை:  பொதுமக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 13 July 2023 2:33 AM GMT (Updated: 13 July 2023 6:10 AM GMT)

சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு இன்று ரூ.20 உயர்ந்து உள்ளது பொதுமக்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு இன்று ரூ.20 உயர்ந்து உள்ளது. இது பொதுமக்கள் இடையே பெரிதும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

நேற்று தக்காளி விலை ஒரு கிலோ ரூ.110-க்கு விற்ற நிலையில், இன்று ரூ.20 உயர்ந்து ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி விலை ரூ.150 வரை விற்பனையாகிறது.

போதிய விளைச்சல் இல்லாதது மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து குறைவு போன்றவற்றால், தக்காளி விலை உயர்வு காணப்படுகிறது. ஆந்திர பிரதேசம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் தக்காளி உற்பத்தி குறைந்து உள்ளதும் இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது.

இஞ்சி நேற்று கிலோ ரூ.260-க்கு விற்ற நிலையில், இன்று ரூ.220-க்கு விலை குறைந்து உள்ளது. சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து ரூ.200-க்கும், பீன்ஸ் ரூ.80-க்கும், பூண்டு விலை ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story