உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை


உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை
x

தோட்டக்கலைத்துறை மூலம் புதுக்கோட்டை உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை

தக்காளி

தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே உள்ளது. புதுக்கோட்டையில் வெளி மார்க்கெட் கடைகளில் தக்காளி கிலோ ரூ.110 முதல் ரூ.120 வரைக்கும் விற்பனையாகிறது. உழவர் சந்தையில் கிலோ ரூ.90 முதல் ரூ.100-க்கு விற்றது. இந்த நிலையில் தக்காளி விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்களுக்கு சற்று குறைந்த விலையில் வினியோகம் செய்ய தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி புதுக்கோட்டை உழவர் சந்தையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் செயல்படுகிற டான்ஹோடா விற்பனை மையத்தின் மூலம் தக்காளி விற்பனை இன்று முதல் தொடங்கியது. ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது. இந்த தக்காளி விற்பனையை கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார். முதல் நாளான இன்று 5 பெட்டிகளில் 150 கிலோ தக்காளி திருச்சியில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்யப்பட்டன. தக்காளி விலை குறையும் வரையில் இந்த விற்பனை நடைபெறும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உரம் தயாரிக்கும் மையம்

உழவர்சந்தையில் செயல்படுகின்ற அனைத்து கடைகளையும் விற்பனை செய்யப்படும் காய், கனி பொருட்களையும் கலெக்டர் மெர்சி ரம்யா பார்வையிட்டார். உழவர் சந்தைகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார். பின்னர் நகராட்சி சந்தைப்பேட்டையில் உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தினை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் தோட்டக்கலை துணை இயக்குனர் குருமணி, புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்ற துணை தலைவர் லியாகத் அலி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story