கனமழை எதிரொலி; தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!


கனமழை எதிரொலி; தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
x
தினத்தந்தி 18 Dec 2023 11:08 AM GMT (Updated: 18 Dec 2023 12:11 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

தூத்துக்குடி,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

அதீத கனமழையால், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாநகரங்கள் முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நெல்லை அடையாளங்களில் ஒன்றான வண்ணாரப்பேட்டை பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு பாளையங்கோட்டையில் அதி கனமழை பெய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஓர் ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்துள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செ.மீட்டர் அதிகனமழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்செந்தூரில் 67.9 செ.மீ மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செ.மீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில் நாளையும் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story