உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபருக்கு நேர்ந்த சோகம்


உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபருக்கு நேர்ந்த சோகம்
x
தினத்தந்தி 9 April 2024 5:48 AM GMT (Updated: 9 April 2024 9:46 AM GMT)

பிருத்திவிராஜ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாக லாரியின் பின் சக்கரத்தில் சிக்கியது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடியை அடுத்த அதங்குடி புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் பிருத்திவிராஜ் (வயது 20). இவர், கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு தனியார் உணவு பரிசோதனை கூடத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இவர் நாகை மாவட்டம் திருக்குவளை அருகே காருகுடி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் அங்கிருந்து தனது நண்பர் தமிழரசன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருக்குவளை-கொளப்பாடு சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது பிருத்திவிராஜ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாக லாரியின் பின் சக்கரத்தில் சிக்கியது.

இதில் பிருத்திவிராஜ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்குவளை போலீசார், பிருத்திவிராஜ் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் லேசான காயங்களோடு உயிர்தப்பிய தமிழரசன், நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story