சென்சார் கருவி பழுது காரணமாக பாம்பன் பாலத்தில் ரெயில் சேவை நிறுத்தம்


சென்சார் கருவி பழுது காரணமாக பாம்பன் பாலத்தில் ரெயில் சேவை நிறுத்தம்
x

கோப்புப்படம்

பாம்பன் தூக்கு பாலத்தில் சென்சார் கருவி பழுது காரணமாக பாம்பன் பாலத்தில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில் கடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. 1914-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த பாலம் நூற்றாண்டை கடந்து சேவை செய்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மிக குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த சென்சார் கருவி திடீரென பழுதாகியுள்ளது. ரெயில்கள் கடக்கும்போது பாம்பன் ரெயில் பாலத்தில் அதிர்வுகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ராமேசுவரம்-மதுரை ரெயில் நேற்று ரத்து செய்யப்பட்டது. மதுரையில் இருந்து ராமேசுவரம் புறப்பட்ட ரெயில், மண்டபம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. ராமேசுவரம்-கன்னியாகுமரி ரெயில் மண்டபம் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் சென்னையில் இருந்து நேற்று இரவு ராமேசுவரத்திற்கு வந்த ரெயில் இன்று அதிகாலை 4 மணிக்கு மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

மதுரையில் உள்ள ரெயில்வே அதிகாரிகள் இன்று காலை பாம்பன் வந்து தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலைக்குள் தொழில்நுட்ப கோளாறு சரி செய்ய முடியாத பட்சத்தில் சென்னை, பெங்களூருவில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்படுவார்கள் என தெரிகிறது.


Next Story