லாரி-சரக்கு வேன் மோதல்; 2 பேர் பலி


தினத்தந்தி 10 July 2023 8:49 PM GMT (Updated: 11 July 2023 11:21 AM GMT)

திருவையாறு அருகே லாரி-சரக்கு வேன் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

தஞ்சாவூர்

திருவையாறு:

திருவையாறு அருகே லாரி-சரக்கு வேன் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

காய்கறி ஏற்றி சென்றனர்

தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த திருச்சோற்றுத்துறை கீழத்தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(வயது 45). அதே தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(43). இவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து ஓட்டி வந்தார்.

இந்த ஆட்டோவில் ஆறுமுகம் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் தினமும் திருவையாறில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் இறக்கி விட்டு வருவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் தமிழ்ச்செல்வன் மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரும் சரக்கு வேனில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் இறக்கி வைத்து விட்டு திருவையாறு வழியாக மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

2 பேர் விபத்தில் பலி

கண்டியூர் சுற்றுகுளம் அருகே வேன் சென்றபோது எதிரில் அரியலூரில் இருந்து சிமெண்டு மூட்டைகள் ஏற்றுக்கொண்டு தஞ்சையை நோக்கி வந்த லாரியும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தமிழ்ச்செல்வன், ஆறுமுகம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தமிழ்ச்செல்வன், ஆறுமுகம் ஆகியோரின் உடல்களை மீட்டு திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் இதுதொடர்பாக நடுக்காவிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான தமிழ்ச்செல்வனுக்கு புஷ்பா என்ற மனைவி இருந்தார். அவர் இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

ஆறுமுகத்தின் மனைவி உமாராணி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.


Next Story