மெட்ரோ ரெயில் சேவைக்கு தியாகராயநகரில் அக்டோபரில் சுரங்கம் தோண்டும் பணி - மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல்


மெட்ரோ ரெயில் சேவைக்கு தியாகராயநகரில் அக்டோபரில் சுரங்கம் தோண்டும் பணி - மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல்
x

தியாகராயநகரில் வருகிற அக்டோபர் மாதம் மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி தொடங்க இருக்கிறது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

சென்னை

சென்னையில் 2-வது கட்டமாக 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் 128 இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் பாதைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

அந்தவகையில் மாதவரத்தில் இருந்து சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3-வது வழித்தடமும், கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4-வது வழித்தடமும், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5-வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது.

4-வது வழித்தடமான மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பகுதிகள் 2 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் சுமார் 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரட்டை சுரங்கங்கள் அமைக்கப்பட உள்ளது. சுமார் 16 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை முழுவதையும் தோண்டுவதற்கு 4 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

ஐ.டி.டி. சிமெண்டேஷன் இந்தியா நிறுவனம் மூலம் பயன்படுத்தப்படும் இந்த சுரங்கம் தோண்டும் எந்திரம், பல்வேறு வகையான சுரங்கப்பாதைகளுக்கான சுரங்கம் தோண்டும் எந்திரங்களை தயாரிப்பதில் முன்னோடியான ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஹெரென்க்னெக்ட் என்ற புகழ்பெற்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன.

இதில் எந்திரம்-2 க்கான தொழிற்சாலை ஏற்றுக்கொள்ளும் சோதனை, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் உள்ள அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள எம்.கே.தொழிற்சாலையில் அதிகாரிகள், ஆலோசகர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக முடிந்து உள்ளது. தொடர்ந்து எந்திரம்-1-க்கான தொழிற்சாலை ஏற்றுக் கொள்ளும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சுரங்கம் தோண்டும் எந்திரத்தின் பெயர் எஸ்1074பி, இது 6.670 மீட்டர் துளை விட்டம் மற்றும் 110 மீட்டர் நீளமுள்ள பூமி அழுத்த சமநிலை எந்திரமாகும்.

இந்த எந்திரத்தின் மொத்த எடை 700 மெட்ரிக் டன் ஆகும். இது இப்போது பகுதிகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் தியாகராயநகர், பனகல் பார்க் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அதற்கு முன்பாக, எந்திரத்தை செயல்படுத்துவதற்கான கட்டுமான பணிகள் தியாகராயநகர், பனகல் பார்க் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வருகிற அக்டோபர் மாதத்தில் தியாகராயநகரில் இந்த சுரங்கம் தோண்டும் எந்திரம் பணியில் ஈடுபடுத்தப்படலாம். இந்த எந்திரம் பூமிக்கு அடியில் 29 மீட்டர் ஆழத்தில் கீழ்நிலையில் தொடங்கப்பட்டு, பனகல் பார்க் நிலையத்திலிருந்து நந்தனம் வழியாக சுரங்கம் தோண்டிக் கொண்டு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் போட் கிளப்பை வந்தடையும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.


Next Story