உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி


உப்புக்கோட்டை பகுதியில்  தக்காளி விலை அதிகரிப்பு:  விவசாயிகள் மகிழ்ச்சி
x

உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேனி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கூழையனூர், குச்சனூர், பாலார்பட்டி, குண்டல் நாயக்கன்பட்டி, உப்புக்கோட்டை உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முட்டைக்கோஸ், பீட்ரூட், தக்காளி , முள்ளங்கி, கத்தரிக்காய், வெங்காயம், கொத்தமல்லி என அனைத்து வகையான காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் ஆண்டின் அனைத்து பருவத்திலும் காய்கறி சாகுபடி செய்யப்படுவது சிறப்பம்சமாகும். முல்லைப்பெரியாற்று பாசனம் மூலம் விளைச்சல் அடையும் இந்த பகுதி காய்கறிகள் திறட்சி, சுவையாக இருக்கும். இதனால் கம்பம் பள்ளத்தாக்கு காய்கறிகளுக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களில் கடும் கிராக்கி உள்ளது. இந்நிலையில் கடைமடை பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி விளைச்சல் அடைந்து அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

போதிய பாசன வசதி மற்றும் நோய் தாக்குதல் இல்லாததால் தக்காளி நன்கு விளைச்சல் அடைந்துள்ளது. மேலும் விலையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்ட 15 கிலோ அடங்கிய தக்காளி கூடை தற்போது ரூ.750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 More update

Next Story