நெல்லை-சென்னை இடையே இன்று சேவையை தொடங்கும் வந்தே பாரத்: சிறப்புகள் என்னென்ன..?


நெல்லை-சென்னை இடையே இன்று சேவையை தொடங்கும் வந்தே பாரத்: சிறப்புகள் என்னென்ன..?
x
தினத்தந்தி 23 Sep 2023 11:29 PM GMT (Updated: 24 Sep 2023 5:45 AM GMT)

இன்று முதல் நெல்லை-சென்னை இடையே 8 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரெயில்வே ஏழைகளின் போக்குவரத்து சாதனமாக உள்ளது. நூற்றாண்டுகளை கடந்தும் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி பயணம் செய்யக்கூடியதாகவும் உள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களை 4-வழிச்சாலைகள் இணைத்தாலும், ரெயில் பயணத்தை விரும்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

தற்போது, நவீன வசதிகளை கொண்ட அதிவிரைவு ராஜதானி, தேஜஸ், வந்தே பாரத் என ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

மினி புல்லட் ரெயில் என அழைக்கப்படும் வந்தே பாரத் ரெயில், தமிழகத்தை பொறுத்தவரை மைசூரு-சென்னை இடையே கடந்த நவம்பர் மாதம் 11-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இதே போல் கோவை-சென்னை இடையேயும் கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதி முதல் வந்தே பாரத் பயணித்து வருகிறது.

ஆனால், தென்மாவட்ட பயணிகளுக்கு வந்தே பாரத் எப்போது என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நெல்லை-சென்னை இடையே 8 பெட்டிகளுடன் கூடிய வந்தேபாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் 650 கி.மீ. தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடக்கும். இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

தொழில்நுட்பங்கள்

சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தற்போது வரை தலா 16 பெட்டிகளை கொண்ட 5 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதில், புதுடெல்லி-வாரணாசி, புதுடெல்லி-கத்ரா ஆகிய ரெயில்கள் 2018-19 காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட முதல் மாதிரி ரெயில்களாகும். அதன்பின்னர், சிறிய மாறுதல்களுடன் வந்தேபாரத் 2.0 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு காந்திநகர்-மும்பை, உனா-டெல்லி, சென்னை -மைசூரு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.

இந்த ரெயிலை அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும். நெல்லை-சென்னை வந்தேபாரத் ரெயிலானது, சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது.

சென்னை சென்டிரல்-கோவை, நெல்லை-சென்னை ஆகிய ரெயில்கள் தலா 8 பெட்டிகளை கொண்டுள்ளன. இதில் 7 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், ஒரேயொரு எக்சிக்யூட்டிவ் வகுப்பு பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள சிறப்புகள் வருமாறு:-

இந்த பெட்டிகளை தயாரிக்க ஒரு பெட்டிக்கு சராசரியாக ரூ.65 கோடி செலவாகிறது. அனைத்து கதவுகளும் தானாக திறந்து மூடிக்கொள்ளும். ஒரு கதவு திறந்திருந்தாலும் ரெயிலை இயக்க முடியாது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், அந்த கதவை தானியங்கி சேவையில் இருந்து நீக்கி கொள்ள முடியும்.

பொதுவாகவே என்ஜினின் இழுவை திறனை கொண்டு ரெயில்கள் இயங்குகின்றன. இந்த ரெயிலில் என்ஜின் மட்டுமின்றி ரெயில் பெட்டிகளிலும் மோட்டார் பொருத்தப்பட்டு ரெயில் இயக்கப்படுவதால் அதிவேகத்தில் செல்கிறது. ஒரு சக்கரம் அல்லது பிரேக் பழுதானாலும் ரெயிலை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், ரெயிலின் வேகம் மட்டும் குறைந்துவிடும். என்ஜின் பழுது என்பதற்கு வேலையில்லை.

508 இருக்கைகள்

சேர்கார் பெட்டிகளில் 3 பேர் மற்றும் 2 பேர் அமரும் வகையிலான இருக்கைகளை கொண்டுள்ளன. எக்சிக்யூட்டிவ் வகுப்பில் 2 பேர் அமரும் வகையிலான இருக்கைகள் உள்ளன. இந்த வகுப்பில் 52 இருக்கைகளும், மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான வசதிகளை கொண்ட சேர்கார் பெட்டியில் 44 இருக்கைகளும், சாதாரண பயணிகளுக்கான சேர்கார் பெட்டிகளில் 78 இருக்கைகளும் என 8 பெட்டிகளிலும் சேர்த்து, 508 இருக்கைகள் உள்ளன.

தண்ணீர் பாட்டில் வைப்பதற்கான வசதி, செல்போன் சார்ஜர் வசதி, யூ.எஸ்.பி. போர்ட், உணவு டிரே, இருக்கைக்கு மேல் தனித்தனி குறைந்த வெளிச்சம் கொண்ட சென்சார் லைட்டுகள், விமானத்தில் இருப்பது போன்ற மேற்கூரை வடிவமைப்பு, லக்கேஜ் வைப்பதற்கான ரேக்குகள், ரெயில் பெட்டி மற்றும் கழிவறைக்குள் புகை மற்றும் தீ தடுப்பு அலாரம், தீயணைப்பு கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள், ஒவ்வொரு பெட்டிக்கும் தனித்தனியாக 2 புறங்களிலும் திறக்கும் கதவுகள், பெட்டி எண், ரெயிலின் வேகம், அடுத்த ரெயில் நிலையம் உள்ளிட்ட டிஜிட்டல் தகவல் பலகை அறிவிப்பு, ஒலிபெருக்கி வசதி, ரெயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் அனைத்து பெட்டிகளிலும் அலாரம் ஒலிக்கும் வசதி ஆகியவையும் உள்ளன.

பயணிகளுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் கார்டு ஆகியோருடன் பேசுவதற்கான வசதி ஒவ்வொரு பெட்டியிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை தவறாக பயன்படுத்தும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

கழிப்பறை வசதியை பொறுத்தமட்டில், இந்திய அமைப்பு, மேல்நாட்டு அமைப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கானது என 3 வகையில் உள்ளன. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை மிகவும் விசாலமானதாகவும், பல்வேறு வசதிகளையும் கொண்டுள்ளது. கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள் அவசரமாக கழிப்பறை செல்ல வேண்டியிருந்தால், குழந்தைகளை பாதுகாப்பாக உட்கார வைக்கும் இருக்கை வசதியும் உள்ளது.

பார்வையற்றவர்களின் வசதிக்காக ஒவ்வொரு பெட்டியிலும் தேவையான இடங்களில் பிரெய்லி எழுத்துக்கள் கொண்ட அறிவிப்பு பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.

முன்பதிவு தொடங்கியது

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது.

இதற்கான கட்டணம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முக்கிய நாட்களுக்கான டிக்கெட்டுகள் வேகமாக முன்பதிவாகி விற்றுத்தீர்ந்தன. பின்னர் செய்யப்பட்ட பதிவுகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாறின.

வந்தே பாரத் கட்டணம்

மதுரை-விருதுநகர்: சேர்கார்- ரூ.380, எக்சிக்யூட்டிவ்-ரூ.705

மதுரை-நெல்லை: சேர்கார்-ரூ.545, எக்சிக்யூட்டிவ் ரூ.1055

மதுரை-திண்டுக்கல்: சேர்கார்-ரூ.545, எக்சிக்யூட்டிவ் ரூ.965

மதுரை-திருச்சி: சேர்கார்-ரூ.665, எக்சிக்யூட்டிவ்-ரூ.1215

மதுரை-விழுப்புரம்: சேர்கார்-ரூ.955, எக்சிக்யூட்டிவ்-ரூ.1790

மதுரை-தாம்பரம்: சேர்கார்-ரூ.1385, எக்சிக்யூட்டிவ்-ரூ.2475

மதுரை-சென்னை: சேர்கார்-ரூ.1425, எக்சிக்யூட்டிவ்-ரூ.2535

தேஜஸ் எக்ஸ்பிரஸ் கட்டணம்

மதுரை-திண்டுக்கல்: சேர்கார்-ரூ.380, எக்சிக்யூட்டிவ் ரூ.760

மதுரை-திருச்சி: சேர்கார்-ரூ.545 எக்சிக்யூட்டிவ்-ரூ.1090

மதுரை-தாம்பரம்: சேர்கார்-ரூ.1190, எக்சிக்யூட்டிவ்-ரூ.2265

மதுரை-சென்னை: சேர்கார்-ரூ.1220, எக்சிக்யூட்டிவ்-ரூ.2320

வைகை எக்ஸ்பிரஸ் (சேர்கார்)

மதுரை-திண்டுக்கல்: ரூ.310 , மதுரை-திருச்சி: ரூ.350

மதுரை-விழுப்புரம்: ரூ.535 , மதுரை-தாம்பரம்: ரூ.665

மதுரை-சென்னை: ரூ.685


Next Story