வெண்டை அறுவடை பணிகள்


வெண்டை அறுவடை பணிகள்
x
தினத்தந்தி 8 July 2023 7:30 PM GMT (Updated: 9 July 2023 12:01 PM GMT)

திருத்துறைப்பூண்டி அருகே வெண்டை அறுவடை பணிகள் குறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

திருவாரூர்

வெண்டை சாகுபடி

தோட்டக்கலை துறையின் மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் துல்லிய பண்ணையம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி விவசாயிகளுக்கு வெண்டை போன்ற காய்கறி விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் கிராமத்தில் கடந்த ஆண்டு துல்லிய பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட்டு, விவசாயிகளுக்கு வெண்டை விதைகள் வினியோகம் செய்யப்பட்டன.

அறுவடை

இந்த பகுதியில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட வெண்டை விதையை விவசாயிகள் விதைத்து, சாகுபடி பணிகளை மேற்கொண்டனர். தற்போது அங்கு பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் வரம்பியம் கிராமத்தில் வெண்டைக்காய் சாகுபடியின் தற்போதைய நிலை குறித்து திருத்துறைப்பூண்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் ஆய்வு செய்தார்.

அவர் வெண்டைக்காய் மகசூல் மற்றும் விற்பனை நிலை குறித்தும் கேட்டறிந்தார். அப்போது அவர் கூறுகையில், 'தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் வழங்கப்பட்ட ஆர்யா என்ற வெண்டை விதை ரகம் வழங்கப்பட்டது. துல்லிய பண்ணையம் என்ற திட்டத்தின் கீழ் இந்த விதை ரகங்கள் வழங்கப்பட்டது.

சிரமமின்றி...

அவ்வாறு வழங்கப்பட்ட வெண்டை தற்போது அறுவடை நடைபெறுகிறது. பொதுவாக வெண்டையின் தண்டு பகுதியில் காணப்படும் முள் போன்ற அமைப்புகளால் அறுவடை செய்யும்போது விவசாயிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது.

அத்தகைய முள் போன்ற அமைப்பு இந்த ஆர்யா ரகத்தில் இல்லாததால் விவசாயிகள் அறுவடையை சிரமமின்றி மேற்கொள்ள முடியும்' என்றார். ஆய்வின் போது உதவி தோட்டக்கலை அலுவலர் கார்த்திகேசன் உடன் இருந்தார்.


Next Story