வைகை அணை நீர்மட்டம் 56 அடியாக உயர்வு

வைகை அணை நீர்மட்டம் 56 அடியாக உயர்ந்தது
வைகை அணை நீர்மட்டம் 56 அடியாக உயர்வு
Published on

ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட பாசனம் மற்றும் நீர் ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் கேரளாவில் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் முல்லைப்பரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் முல்லைப்பரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று அணையின் நீர்மட்டம் 56.96 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 1,823 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனம், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 969 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதற்கிடையே அணையில் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று அதிகமாக வீசி வருவதால் அணையில் தேங்கியிருக்கும் தண்ணீர் கடல் அலைபோல் ஆர்ப்பரித்து காணப்படுகிறது. இதனால் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com