அறிவியல், பொருளாதாரம் மட்டுமின்றி ஆன்மிகத்தோடு வளர வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
![அறிவியல், பொருளாதாரம் மட்டுமின்றி ஆன்மிகத்தோடு வளர வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு அறிவியல், பொருளாதாரம் மட்டுமின்றி ஆன்மிகத்தோடு வளர வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/05/1548756-state-07.webp)
அறிவியல், பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இல்லாமல், ஆன்மிகத்தோடு வளர வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சென்னை,
சென்னையில் நடைபெற்ற வள்ளலார் சிலை திறப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய அவர், 'பாரத்' என்பதன் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர வேண்டும் எனவும், இதனை பாடப்புத்தகத்தில் பாடமாக வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
'பாரத்' என்பது ஆன்மிகவாதிகள் மற்றும் ரிஷிகள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அனைவரும் ஒன்று என்று வள்ளலார் கூறுவது தான் சனாதன தர்மத்தின் மூலம் என்று கூறிய கவர்னர் ஆர்.என்.ரவி, இதனை புரிந்து கொள்ளாமல் சிலர் பேசி வருவதாகவும், சமூகத்தில் உள்ள வேற்றுமைகளை சனாதனம் எனக் கூறும் நபர்களை என்ன சொல்வது என்றே தெரியவில்லை எனவும் கூறினார்.
தான் ஒரு சனாதனவாதியாக இருப்பதால், எவர் தன்னை அசிங்கப்படுத்தினாலும் அவர்களை ஒதுக்க முடியாது என்றும், அதைத் தான் சனாதனம் கூறுகிறது என்றும் ஆர்.என்.ரவி கூறினார். மேலும் அறிவியல், பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இல்லாமல், ஆன்மிகத்தோடு வளர வேண்டும் என்றும், சனாதனம் வலியுறுத்தும் ஒரே குடும்பமாக வளர வேண்டும் என்றும் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.