'காமராஜர் பிறந்தநாளில் நடிகர் விஜய் இரவு பாடசாலை தொடங்குவதை வரவேற்கிறோம்' - கே.எஸ்.அழகிரி


காமராஜர் பிறந்தநாளில் நடிகர் விஜய் இரவு பாடசாலை தொடங்குவதை வரவேற்கிறோம் - கே.எஸ்.அழகிரி
x

யார் நல்லது செய்தாலும் காங்கிரஸ் அதை ஆதரிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி கவுரவித்தார். இதற்கான பணிகள் அனைத்தையும் அவரது மக்கள் இயக்க நிர்வாகிகள் மேற்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து இன்று ஜூலை 15-ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் விஜய் அறிவுறுத்தலின்படி, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் காமராஜரின் உருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் போன்றவற்றை மக்கள் இயக்க நிர்வாகிகள் வழங்கினர்.

மேலும் காமராஜரை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 'தளபதி விஜய் பயிலகம்' என்ற பெயரில் இரவு பாடசாலைகள் தொடங்கப்பட உள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் இந்த அறிவிப்புகள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "யார் நல்லது செய்தாலும் அதை நாம் ஆதரிக்கிறோம். நடிகர் விஜய் காமராஜர் பிறந்தநாளில் இரவு பாடசாலைகள் தொடங்குவதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. ஒருவர் அரசியலுக்கு வருகிறாரா, இல்லையா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, நாமே அதை முடிவு செய்ய முடியாது" என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.




Next Story