இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன...? பாஜக மாநில துணை தலைவர் ராமலிங்கம் பேட்டி


இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன...?   பாஜக மாநில துணை தலைவர் ராமலிங்கம் பேட்டி
x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது என பாஜக மாநில துணை தலைவர் ராமலிங்கம் கூறியுள்ளார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா சமீபத்தில் காலமானார். இதையடுத்து, அந்த தொகுதி காலியாக இருந்த நிலையில் அடுத்த மாதம் 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. இடைத்தேர்தலில் பதிவாகும் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன.

இந்தநிலையில், ஈரோட்டில் பாஜக துணைத்தலைவர் ராமலிங்கம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஓ.பி.எஸ். - இ.பி.எஸ் அணிகள் இணைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். எனினும், இரு அணிகளையும் இணைக்கும் வேலையில் பாஜக ஈடுபடாது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது, மக்களும் நினைக்கிறார்கள். இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து 2 நாளில் அண்ணாமலை அறிவிப்பார். கால அவகாசம் உள்ளதால், இரு அணிகளும் ஒன்றாக கூட சேரலாம். திமுக எதிராக உள்ள அணிகள் ஒன்றாக சேர வேண்டும். அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்றார்.


Next Story