குடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்


குடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 9 Oct 2023 7:00 PM GMT (Updated: 9 Oct 2023 7:00 PM GMT)

பந்தலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானைகள் கார்களை உடைத்து அட்டகாசம் செய்தது.

நீலகிரி

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் ஆகிய வனப்பகுதியில் ஏராளமான யானைகள், மான்கள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகிறது. இதில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் வனப்பகுதியை யொட்டி உள்ள குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. குறிப்பாக யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. அதன்படி பந்தலூர் அருகே தொண்டியாளம்இ, அம்ரூஸ் வளைவுஇ ஏலமன்னா உள்பட பல பகுதிகளில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து வாழை, தென்னை உள்ளிட்ட பல பயிர்களையும் உடைத்து மிதித்து நாசம் செய்து வருகிறது. இந்த நிலையில் தொண்டியாளத்தில் கடந்த 2 நாட்களாக 2 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களின் குடியிருப்புகளையும் தேயிலை தோட்டதொழிலாளர்களின் குடியிருப்புகளையும் முற்றுகையிட்டு வருகிறது.


இந்தநிலையில் தொண்டியாளம் சாலை ஓரத்தில் குடியிருக்கும் ஜானகி என்பவரின் வீட்டின் கம்பிவேலியை உடைத்து வீட்டின் வாசலுக்குள் நுழைந்தது. அங்கு நின்ற ஷைனி மற்றும் சந்திரன் ஆகியோரின் 2 கார்களை தும்பிகையால் அடித்து உடைத்து சேதப்படுத்தியது. இதையடுத்து பந்தலூரிலிருந்து உப்பட்டி செல்லும் சாலையை வழி மறித்து நின்றது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் தேவாலா வனவர் பாலகிருஷ்ணன், வனகாப்பாளர் பரமேஸ் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று சாலையை மறித்து நின்ற காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த காட்டு யானைகள் வனத்துறையினரையும் பொதுமக்களையும் துரத்தியது. இதனால் அவர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இதன்காரணமாக அந்தப்பகுதியில் பரபரப்பான சூழ்நிைல நிலவியது. சிறிது நேரத்தில் அந்த யானைங்கள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. தொடர்ந்து அந்த காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.




Next Story