கோவிலுக்கு சென்று திரும்பிய போது ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து பெண் பலி - மீனம்பாக்கத்தில் பரிதாபம்

மீனம்பாக்கத்தில் கோவிலுக்கு சென்று திரும்பிய போது ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து பெண் பலியானார்.
கோவிலுக்கு சென்று திரும்பிய போது ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து பெண் பலி - மீனம்பாக்கத்தில் பரிதாபம்
Published on

சென்னை மேற்கு மாம்பலம் ஆண்டியப்ப நாயக்கன் தெருவை சேர்ந்தவர் ரம்யா (வயது 32). இவரது தங்கை அனிதா (20), ஜோதி (25) மற்றும் ரம்யாவின் குழந்தைகளான விக்னேஷ் (8), நேந்திரா (12). இவர்கள் 5 பேரும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் ஆட்டோவில் வந்தவாசி அருகே உள்ள மேல்மலையனூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். இந்த நிலையில், சாமி கும்பிட்டு விட்டு சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் திரும்பி கொண்டிருந்தனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே ஆட்டோ வந்தபோது தூக்க கலக்கத்தில் இருந்த ரம்யா ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதையடுத்து கீழே விழுந்த ரம்யாவின் கால் தொடையில் ஏறிய ஆட்டோ சாலையின் பக்கவாட்டு சுவற்றில் மோதி நின்றது. இதில் பலத்த காயமடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து ரம்யாவின் உடலை கைப்பற்றி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் ஆட்டோ டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com