பூந்தமல்லி அருகே குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி - மகள் கண் எதிரே பரிதாபம்


பூந்தமல்லி அருகே குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி - மகள் கண் எதிரே பரிதாபம்
x

குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி மகள் கண் எதிரேயே பெண் பரிதாபமாக இறந்தார்.

சென்னை

ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி வரலட்சுமி (வயது 46). இவர்களுடைய மகள் குணாளினி (20), தாய்-மகள் இருவரும் போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்தனர்.

நேற்று காலை வழக்கம்போல் தாய்-மகள் இருவரும் மொபட்டில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். குணாளினி மொபட்டை ஓட்டினார். வரலட்சுமி பின்னால் அமர்ந்து இருந்தார்.

பூந்தமல்லி - மவுண்ட் சாலையில் காட்டுப்பாக்கம் அருகே சென்றபோது காட்டுப்பாக்கம் ஊராட்சி மன்ற குப்பை லாரி இவர்கள் மீது மோதியது. இதில் தாய்-மகள் இருவரும் நிலைதடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர்.

அப்போது வரலட்சுமி மீது குப்பை லாரி சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய வரலட்சுமி உடல் நசுங்கி மகள் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார். குணாளினி லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர், போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.விபத்து நடந்த உடன் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story