பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தர்ணா


பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தர்ணா
x

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வமணி (வயது 38). இவர் நேற்று மதியம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பும் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். மேலும் அவர் கூறுகையில், பெரம்பலூர் மேட்டு தெரு, குறிஞ்சி நகரை சேர்ந்த ஒரு தம்பதியினர் சொந்த வீட்டை விற்பதாக ஆசை வார்த்தை கூறி என்னிடம் மொத்தம் ரூ.30 லட்சத்து 14 ஆயிரத்து 709-ஐ பெற்றுக்கொண்டு கிரைய ஒப்பந்த பத்திரம் எழுதித்தரவில்லை. ஆனால் அதே வீட்டை விற்பதாக மற்றொரு பெண்ணிடம் அவர்கள் முன்பணம் பெற்று கிரைய ஒப்பந்தம் எழுதி கொடுத்துள்ளனர். மேலும் அவா்கள் பணத்தை எனக்கு திரும்ப தராமல் மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தும், இதுவரை அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாமலும், நடவடிக்கை எடுக்காமலும் இருந்து வருகின்றனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இதையடுத்து இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதால் செல்வமணி தர்ணாவை கைவிட்டு சென்றார்.


Next Story