மகளிர் உரிமைத்தொகை திட்டம் சரித்திரம் படைப்பது உறுதி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


மகளிர் உரிமைத்தொகை திட்டம் சரித்திரம் படைப்பது உறுதி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 15 Sep 2023 6:47 AM GMT (Updated: 15 Sep 2023 7:00 AM GMT)

மகளிர் உரிமைத்தொகை திட்டம் சரித்திரம் படைப்பது உறுதி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளான இன்று அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், ஒரு கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"மகளிருக்கு குடும்பச்சொத்தில் சம உரிமையை நிலைநாட்டிய முத்தமிழ் அறிஞர் அவர்களின் பெயரிலே, மகளிரின் பொருளாதார உரிமையை நிலைநாட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்ணா பிறந்த காஞ்சியில் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு மாதம் ரூ.1000 எனும் இந்த மகத்தான திட்டத்தை தமிழ்நாடு மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய ஒன்றியமே வாழ்த்துகிறது.

வரலாறாக நம்மை வழி நடத்தும் அண்ணாவின் பிறந்த நாளில், கலைஞர் நூற்றாண்டில் மகளிரின் மேன்மைக்காக செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டமும் சரித்திரம் படைப்பது உறுதி. கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் பயனாளிகள் அனைவருக்கும் என் அன்பும், வாழ்த்தும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story