கழுகுமலையில் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு


கழுகுமலையில் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 5 July 2023 6:45 PM GMT (Updated: 6 July 2023 10:37 AM GMT)

கழுகுமலையில் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கட்டிட உரிமையாளர், காண்டிராக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கட்டிட தொழிலாளி

கழுகுமலை அருகே உள்ள துலுக்கர்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 53). கட்டிட தொழிலாளியான இவருக்கு பொன்னுத்தாய் (45) என்ற மனைவியும், பிரியங்கா (12) என்ற மகளும், இனியவன் (10) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சரவணன் கடந்த ஜூன் 25-ந்தேதி கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதி ராணி வேலுநாச்சியார் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து (60) என்பவருடைய வீட்டில் கட்டிட பணியில் ஈடுபட்டு இருந்தார்.

தவறி விழுந்தார்

அப்போது எதிர்பாராத விதமாக ஏணியில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு கழுகுமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சாவு

ஆனால் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி பொன்னுத்தாய் கொடுத்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வீட்டின் உரிமையாளரான கழுகுமலை ஆறுமுகம் நகர் இசக்கிமுத்து (60), கட்டிட காண்டிராக்டர் கணேசன் (55) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story