காவல்துறை உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு தொடங்கியது


காவல்துறை உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு தொடங்கியது
x

இன்று பொது பிரிவினருக்கு தேர்வு நடைபெற்று வருகிறது.

சென்னை,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 2023-ம் ஆண்டிற்கான காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்தது.

அதன்படி, ஆண்களுக்கான 469 காலிப் பணியிடங்களுக்கு 1,45,709 பேரும், பெண்களுக்கான 152 காலிப் பணியிடங்களுக்கு 40,901 பேரும் என 621 பணியிடங்களுக்கு 1,86,610 பேர் விண்ணப்பித்தனர். காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கும், காவல்துறை சார்ந்துள்ள வாரிசுதாரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள 20 சதவீத காலிப் பணியிடங்களுக்கு 6,101 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இன்று பொது பிரிவினருக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. நாளை காவல்துறை ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. காலையில் மெயின் தேர்வும், பிற்பகலில் தமிழ் தகுதித் தேர்வும் நடைபெறும் என சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தேர்வு காலை 10:00மணி முதல் 12:30 மணி வரையும், பிற்பகல் 3:30 மணி முதல் மாலை 5:10 மணி வரையும் நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 20 தேர்வர்களுக்கு ஒரு சிசிடிவி கேமரா கொண்டு கண்காணிக்கப்படுகிறது.


Next Story