போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நிலம் மோசடி செய்த வாலிபர் கைது


போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நிலம் மோசடி செய்த வாலிபர் கைது
x

ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை

ஆவடி,

ஆவடி காமராஜர் நகர் சேக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 55). இவருக்கு சொந்தமான இடம் சேக்காடு பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் வங்கியில் அடமானம் வைத்துள்ளார். அத்துடன் அந்த இடம் சம்பந்தமாக திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து ராஜசேகரன் அவரது இடத்திற்கான வில்லங்க சான்று பெற்று பார்த்தபோது, அவரது இடம் வேறு இரண்டு பேருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜசேகரன் இதுகுறித்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு சொந்தமான அந்த இடத்தை ஆவடி அடுத்த சேக்காடு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த யுவராஜ் மற்றும் அவரது நண்பர்களான சரத்குமார், இன்பகுமார், பூஞ்சோலை ஆகிய 4 பேரும் சேர்ந்து ராஜசேகரன் பெயரில் உள்ள நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் தயார் செய்து 2 நபர்களுக்கு இடத்தை பிரித்து ரூ.15 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ராஜசேகரன் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் பெருமாள் ஆலோசனைப்படி, கூடுதல் துணை கமிஷனர் முத்துவேல் பாண்டி மேற்பார்வையில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வள்ளி இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

அதன்பேரில் நேற்று காலை இந்த வழக்கில் தொடர்புடைய ஆவடி அடுத்த சேக்காடு மெயின் ரோடு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த பூஞ்சோலை (வயது 35) என்பவரை நேற்று கைது செய்து விசாரித்ததில் ராஜசேகரன் இடத்தை 4 பேரும் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நேற்று மாலை கைது செய்யப்பட்ட பூஞ்சோலை மீது வழக்குப்பதிவு செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது.


Next Story