

சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதன்படி நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டி பதிவான நிலையில், இன்று 9 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,00,804 மாதிரிகள் பரிசேதனை செய்யப்பட்டதில், 9,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,80,728 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 9,02,022 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,263 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 39 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 13,071 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 65,635 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாதிரிகள் தமிழகத்தில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே பாதிப்பு எண்ணிக்கையும் அதிக அளவில் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.