உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பலி - அமெரிக்கா கண்டனம்


உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பலி - அமெரிக்கா கண்டனம்
x

கோப்புப்படம் ANI

உக்ரைனில் நேற்றிரவு ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கீவ்,

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் 11 மாதங்களாக நீடித்து வருகிறது. ரஷிய ராணுவத்தின் தாக்குதல்களை சிறிய நாடான உக்ரைன், உலக நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிகளுடன் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. தொடர்ந்து நீடிக்கும் இந்தப் போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன.

இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதலை சமாளித்து பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனுக்கு நவீன டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதற்கு மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துள்ளன. உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

நவீன டாங்கிகள் வழங்கும் மேற்கத்திய நாடுகளின் முடிவானது, அவர்கள் இந்த போரில் நேரடியாக பங்கேற்பதாகவே அர்த்தம் என ரஷியா எச்சரித்துள்ளது. இந்த நிலையில், நவீன டாங்கிகள் அனுப்பப்படும் என அமெரிக்கா மற்றும் ஜெர்மனி அறிவித்த 24 மணி நேரத்துக்குள் உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் 11 பேர் பலியாகினர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 11 பேர் காயமடைந்தனர். கீவ் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் சேதமடைந்தன. தாக்குதலுக்குப் பிறகு சுமார் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் முதன்மை துணை செய்தித்தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறியதாவது:- நீங்கள் அனைவரும் பார்த்தது போல் ரஷியா நேற்றிரவு உக்ரைன் முழுவதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு கண்டனத்தையும் அமெரிக்காவின் சார்பாக காயமடைந்த அனைவருக்கும் அனுதாபத்தையும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.


Next Story