இந்தோனேசியாவில் கிறிஸ்தவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்


இந்தோனேசியாவில் கிறிஸ்தவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்
x
தினத்தந்தி 12 Feb 2018 3:45 AM IST (Updated: 12 Feb 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

இந்தோனேசியாவில் கிறிஸ்தவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். அதே நேரத்தில் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களும், இந்துக்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளனர்.

சமீப காலமாக அங்கு மத அடிப்படையிலான பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. தேசிய அளவில் மத சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தித்தான் இந்த தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், அங்கு உள்ள யோக்யகர்த்தா நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி கத்தோலிக்க தேவாலயத்துக்கு வழிபாடு நடத்த சென்ற கிறிஸ்தவர்கள் 4 பேர் கத்தியால் சரமாரி குத்தப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

‘‘இந்த சம்பவம், பயங்கரவாத தாக்குதலா என்பதை உடனடியாக உறுதி செய்ய முடியாது, தாக்குதல் நடத்திய நபரை பிடித்து விட்டோம், அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது’’ என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

தாக்குதல் நடத்திய நபரை பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் அவர் பல்கலைக்கழக மாணவராக இருக்கக்கூடும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம், யோக்யகர்த்தா நகரில் வசிக்கிற கிறிஸ்தவ மக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story