முஷரப்பை கைது செய்ய உத்தரவு பாகிஸ்தான் கோர்ட்டு பிறப்பித்தது


முஷரப்பை கைது செய்ய உத்தரவு பாகிஸ்தான் கோர்ட்டு பிறப்பித்தது
x
தினத்தந்தி 10 March 2018 4:30 AM IST (Updated: 10 March 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் (வயது 74). இவர் அங்கு 1999-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டுவரை அதிபர் பதவி வகித்தார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் (வயது 74). இவர் அங்கு 1999-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டுவரை அதிபர் பதவி வகித்தார். அவர் தனது பதவிக்காலத்தில், அங்கு நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். பல நீதிபதிகளை கைது செய்ய உத்தரவிட்டார். 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி அவர் மீது முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் போடப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் தேசத்துரோக வழக்கில் பெஷாவர் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிடி தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, விசாரணை நடத்தியது. விசாரணையின்போது, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் முஷரப்பின் சொத்துகள் குறித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்தது.

மேலும், முஷரப்பை கைது செய்ய உத்தரவு பிறப்பிப்பதுடன் அவரது சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல் அக்ரம் ஷேக், நீதிபதிகளைக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து ஆஜர்படுத்தவும், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

முஷரப், தற்போது நாட்டில் இல்லை. அவர் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம், சிகிச்சை பெறப்போவதாக கூறி துபாய் சென்றார். அங்கிருந்து இன்னும் நாடு திரும்பவில்லை. அவர் அதே ஆண்டின் மே மாதம் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.
1 More update

Next Story