ஈராக் நாட்டில் சதாம் உசேன் அரண்மனை, அமெரிக்க பல்கலைக்கழகம் ஆகிறது


ஈராக் நாட்டில் சதாம் உசேன் அரண்மனை, அமெரிக்க பல்கலைக்கழகம் ஆகிறது
x
தினத்தந்தி 16 March 2018 5:00 AM IST (Updated: 16 March 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

ஈராக் நாட்டில் சதாம் உசேன் வாழ்ந்த அரண்மனையில் அமெரிக்க பல்கலைக்கழகம் வர உள்ளது என ஈராக் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பாக்தாத்,

ஈராக் நாட்டில் 1979-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை அதிபராக கொடி கட்டிப்பறந்தவர் சதாம் உசேன். அமெரிக்க எதிர்ப்பால் பிரபலம் ஆனார். அதுவே அவருக்கு எதிராகவும் திரும்பியது.

2003-ம் ஆண்டு போருக்கு பின்னர் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதே ஆண்டின் டிசம்பர் 13-ந் தேதி திக்ரித் நகருக்கு அருகே பாதாள அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேன் கைது செய்யப்பட்டார். அவர் மீது மனித உரிமை மீறல் வழக்குகள் தொடரப்பட்டன. அதன் முடிவில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு, டிசம்பர் 30-ந் தேதி அவர் தூக்கில் போடப்பட்டார்.

பாக்தாத் நகரில் அவர் வாழ்ந்த அரண்மனைகளில் முக்கியமானது, ரத்வானியா அரண்மனை. இதில்தான் சதாம் உசேன் பெரும்பாலும் வாழ்ந்தார்.

இந்த அரண்மனையில் அமெரிக்க பல்கலைக்கழகம் வர உள்ளது. இதை ஈராக் அதிகாரிகள் தேர்வு செய்து உள்ளனர். இது குறித்த தகவல்களை ஈராக் அரசுக்கு சொந்தமான ‘அல் சபா’ பத்திரிகை வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக அரசு சொத்துக்கள் துறையின் தலைவரான அகமது அரல் ருபாயி கூறுகையில், “பாக்தாத்தில் உள்ள ரத்வானியா அரண்மனையை அமெரிக்க பல்கலைக்கழகம் அமைப்பதற்கு, மந்திரிசபையால் உருவாக்கப்பட்ட கமிஷன் முடிவு செய்து உள்ளது” என கூறினார்.

பாக்தாத்தில் அமெரிக்க பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஈராக்குக் கான அமெரிக்க தூதரிடம், அந்த நாட்டின் கல்வி மந்திரி அப்துல் ராசிக் ஈசா உறுதி அளித்தது நினைவுகூரத்தக்கது.
1 More update

Next Story