முன்னாள் உளவு அதிகாரி மீது ரசாயன தாக்குதல் நடத்தப்படவில்லை: ரஷ்ய அதிபர் புதின்

பிரிட்டனில் இருந்த முன்னாள் உளவு அதிகாரி மீது ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை ரஷ்ய அதிபர் புதின் நிராகரித்துள்ளார். #Putin
மாஸ்கோ,
ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு இங்கிலாந்து மீட்டு அடைக்கலம் கொடுத்தது. தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் விஷம் ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் இங்கிலாந்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, ரஷ்ய தூதரக அதிகாரிகள் 23 பேரை வெளியேற்ற முடிவு செய்து இருப்பதாக வியாழன்று இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அதிரடியாக அறிவித்தார். இதற்கு பதில் நடவடிக்கையாக, ரஷ்யாவும் 23 பிரிட்டன் தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதாக அதிரடியாக அறிவித்தது.
இவ்வாறாக இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்த நிலையில், ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை ரஷ்ய அதிபர் புதின் நிராகரித்தார். அனைத்து ரசாயன ஆயுதங்களையும் நாங்கள் அழித்துவிட்டோம் என்று கூறிய புதின், ரசாயன தாக்குதலை ரஷ்யா நடத்தியதாக கூறுவது அபத்தமானது” என்றார்.
Related Tags :
Next Story






