டிரம்புக்கு வாக்களிக்க பெண்கள் தங்களது கணவர்களிடம் ஒப்புதல் வாங்க வேண்டும்: ஹிலாரி பேச்சுக்கு டிரம்ப் கண்டனம்


டிரம்புக்கு வாக்களிக்க பெண்கள் தங்களது கணவர்களிடம் ஒப்புதல் வாங்க வேண்டும்:  ஹிலாரி பேச்சுக்கு டிரம்ப் கண்டனம்
x
தினத்தந்தி 21 March 2018 9:53 AM GMT (Updated: 21 March 2018 9:53 AM GMT)

டிரம்புக்கு வாக்களிக்க பெண்கள் தங்களது கணவர்களிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என கூறிய ஹிலாரி கிளிண்டனுக்கு அமெரிக்க அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார். #HillaryClinton

வாஷிங்டன்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜனநாயக கட்சியின் 2016ம் ஆண்டிற்கான அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கடந்த வாரம் பேசும்பொழுது, டொனால்டு டிரம்புக்கு வாக்களிப்பதற்காக பெண்கள் தங்களது கணவர்கள், தங்களது மகன்கள் மற்றும் தங்களது ஆண் முதலாளிகளிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து அவர், டிரம்புக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், கறுப்பு மனிதர்கள் உரிமைகளை பெறுவதற்கோ, பெண்கள் வேலை பெறுவதற்கோ அல்லது இந்திய அமெரிக்கர் அதிக வெற்றிகளை பெறுவதற்கோ விரும்புவதில்லை என கூறினார்.

இந்நிலையில், தேசிய குடியரசு கட்சி கூட்டத்தில் மதிய உணவின்பொழுது இதற்கு பதிலளித்துள்ள டிரம்ப், இது ஒரு நல்ல விசயமில்லை.  தனது பேச்சில் வாக்களிக்கும் பெண்கள் பற்றி ஹிலாரி கூறியுள்ளது நல்ல விசயமில்லை என கூறினார்.

உண்மை என்னவெனில், ஜனநாயக கட்சியினர் ஒரு பொழுதும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது கிடையாது.  ஏனெனில், தினந்தோறும் பணிக்கு செல்வோருடனான தொடர்பை அவர்கள் இழந்து விட்டனர் என கூறியுள்ளார்.

ஹிலாரி தன்னுடைய பேச்சிற்கு பின் வெள்ளை இன பெண் வாக்காளர்களை குறிப்பிடவில்லை என தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.  அதில் அவர், நான் கூறியது சில பேரை வருத்தமடைய செய்திருக்கலாம்.  அது தவறாகவும் புரிந்து கொள்ளப்பட்டு இருக்கலாம்.  எந்த ஒரு தனி நபரையோ அல்லது குழுவையோ அவமரியாதை செய்யும் வகையில் நான் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.


Next Story