முஷரப்பின் தேசிய அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றை முடக்க பாக்.உள்துறை உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்பின் தேசிய அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை முடக்குமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லமாபாத்,
பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் ராணுவ ஆட்சியாளருமான முஷரப், தன் மீதான தேசத்துரோக வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, முஷரப்பின் தேசிய அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகியற்றை முடக்குமாறு தேசிய தரவுகள் மற்றும் பதிவாணையத்தை உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
முஷரப்பின் தேசிய அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை முடக்கப்பட்டால், அவரது வங்கி கணக்குகளும் முடக்கப்படும். அதேபோல், சர்வதேச நாடுகளுக்கு முஷரப்பால் பயணம் செய்ய முடியாது.
பாகிஸ்தானில் கடந்த 2007 ஆம் ஆண்டு அவசர நிலை பிறப்பித்ததற்காக முஷரப் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஆறு ஆண்டுகள் வெளிநாட்டில் தஞ்சம் அடைந்து இருந்த முஷரப் 2013 ஆம் ஆண்டு மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார்.
இதன்பின்னர், முஷரப் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், 2016 ஆம் ஆண்டு மருத்துவ பரிசோதனைக்காக நீதிமன்ற அனுமதியுடன் துபாய் சென்ற முஷரப், பாகிஸ்தான் திரும்பவில்லை.
Related Tags :
Next Story






