

ஜெனீவா,
சோமாலியா நாட்டின் பொசாசோ துறைமுகத்தில் இருந்து கடத்தல்காரர்களின் படகில் 100 பேர் சட்டவிரோத முறையில் கடல் வழியே பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
இந்த படகு ஏடன் வளைகுடா பகுதியில் வந்தபொழுது அதிக அளவில் அலைகள் வீசியுள்ளன. இதில் சிக்கிய படகு கடலுக்குள் கவிழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் படகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கி உள்ளனர்.
இதுபற்றி வெளியாகி உள்ள தகவலில், 37 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் என 46 பேர் பலியாகி உள்ளனர். 16 பேரை காணவில்லை. அவர்கள் இறந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. படகில் பயணம் செய்தவர்கள் அனைவரும் எத்தியோப்பிய நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடற்கரையை ஒட்டிய பகுதியில் அலைகள் உயரே வீசியபடி இருந்துள்ளன. இதனால் உயிர் காப்பு கவசம் அணியாதவர்கள் அச்சத்தில் கடலுக்குள் குதித்து உள்ளனர். அவர்களில் பலர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என உயிர் தப்பிய சக பயணிகள் தெரிவித்துள்ளனர்.