ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிப்பு


ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 18 Jun 2018 4:15 AM IST (Updated: 18 Jun 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. தலீபான்களை சமரச பேச்சுவார்த்தைக்கு அதிபர் அ‌ஷரப் கனி அழைத்து உள்ளார்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் நோன்பு காலத்தையொட்டி, அதிபர் அ‌ஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித்தார்.

இது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டபோது, தலீபான்கள் வன்முறையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். குறிப்பாக, ‘‘வன்முறையானது, மக்களின் இதயங்களையும், மனங்களையும் கவர்ந்து இழுக்காது. அதற்கு பதிலாக தலீபான்களை தீவு போன்று தனிமைப்படுத்தும். இதை தலீபான்கள் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வருகிற உள்நாட்டுப் போரில், முதல் முறையாக தலீபான்களும் 3 நாள் போர் நிறுத்தம் அறிவித்தனர்.

இது வரை இல்லாத வகையில் அந்த 3 நாளில் போர் நிறுத்தம் மீறப்படவில்லை. அதுமட்டுமின்றி, ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆப்கானிஸ்தான் படையினரும், தலீபான்களும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்து கூறினர். பொதுமக்களுடனும் தலீபான்கள் ‘செல்பி’ படங்கள் எடுத்து, அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

ஆப்கானிஸ்தான் மக்களிடையே இந்த போர் நிறுத்தம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

நங்கர்ஹார் மாகாணத்தில் நேற்று முன்தினம் தலீபான்களும், ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 36 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றனர். இந்த சம்பவத்தை தவிர போர் நிறுத்த காலத்தில் அமைதி நிலவியது.

இந்த நிலையில் போர் நிறுத்தத்தை மேலும் 9 நாட்களுக்கு நீட்டித்து அதிபர் அ‌ஷரப் கனி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இந்த அறிவிப்பு பற்றி உடனடியாக தலீபான்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இதற்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு அதிபர் அ‌ஷரப் கனி டெலிவி‌ஷனில் உரை ஆற்றினார். அப்போது அவர் கூறும்போது, ‘‘தலீபான்களுடன் விரிவான பேச்சு வார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது. தலீபான்கள் முன் வைத்து உள்ள அனைத்து பிரச்சினைகள், கோரிக்கைகள் குறித்து சமரச பேச்சுவார்த்தையின்போது விவாதிப்பதற்கு தயாராக இருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘ரம்ஜான் நிகழ்ச்சியில் தலீபான்களும், அரசு அதிகாரிகளும் ஒன்றாக கலந்து கொண்டது, நாம் அனைவரும் சமாதானத்துக்காகத்தான் உள்ளோம் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்தது’’ என்றும் கூறினார்.

போர் நிறுத்த நீட்டிப்பு தொடர்பாக டுவிட்டரில் அதிபர் அ‌ஷரப் கனி ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர், ‘‘ஆப்கானிஸ்தான் தலீபான்களும் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். போர் நிறுத்தத்தின்போது, காயம் அடைந்த தலீபான்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்போம். தேவையான மனித நேய உதவிகளையும் செய்வோம். சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தலீபான்கள் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவும், சந்திக்கவும் அனுமதிக்கப்படும்’’ என கூறி உள்ளார்.

இரு தரப்பு சமரச முயற்சிகளை அமெரிக்கா வரவேற்று உள்ளது.

இதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ குறிப்பிடுகையில், ‘‘ஆப்கானிஸ்தான் போருக்கு முடிவு கட்டுகிற வகையில், இரு தரப்பினரும் சமரச உடன்பாடு, அரசியல் தீர்வு காண்பதற்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story