சீனாவில் பள்ளி மாணவர்களுக்கு கத்திக்குத்து; 2 பேர் பலி


சீனாவில் பள்ளி மாணவர்களுக்கு கத்திக்குத்து; 2 பேர் பலி
x
தினத்தந்தி 29 Jun 2018 3:45 AM IST (Updated: 29 Jun 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

சீனாவில் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி. தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

ஷாங்காய்,

சீனாவில், பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வன்முறை சார்ந்த குற்றச்செயல்கள் நடப்பது அபூர்வம். அதிலும் குறிப்பாக நகரங்களில் எந்த வன்செயலும் நடைபெறாது. அந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும்.

இந்த நிலையில், அந்த நாட்டின் மிகப்பெரிய நகரமான ஷாங்காய் நகரத்துக்கு உட்பட்ட சூகுய் மாவட்டத்தில் உள்ள ஆரம்பப்பள்ளிக்கூடம் ஒன்றின் வாசலில் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு 3 மாணவர்களையும், ஒரு மாணவரின் தாயாரையும் ஒரு மர்ம நபர் காய்கறி வெட்டும் கத்தியால் சரமாரியாக குத்தினார். அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

உடனடியாக அவர்கள் அங்கு இருந்து மீட்கப்பட்டு, ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் 2 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். எஞ்சிய ஒரு மாணவருக்கும், படுகாயம் அடைந்த மாணவர் ஒருவரின் தாயாருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், தாக்குதல் நடத்திய நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் 29 வயதானவர். வேலை இல்லாதவர். சமூகத்தின் மீது மிகுந்த கோபம் கொண்டவர். அந்தக் கோபத்திலும், வெறுப்புணர்விலும்தான் அப்பாவி மாணவர்களையும், ஒரு மாணவரின் தாயாரையும் கத்தியால் சரமாரியாக குத்தி இருக்கிறார் என தெரியவந்து உள்ளது.

இந்த சம்பவம், ஷாங்காய் பகுதியில் உள்ள பெற்றோர்களிடமும், மாணவ, மாணவிகளிடமும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story