ஜாகீர் நாயக் இந்தியாவுக்கு அனுப்பப்படமாட்டார்- மலேசியா சொல்கிறது

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் ஜாகீர் நாயக்கிற்கு இந்தியாவில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரியும் வரை இந்திய அனுப்பப்பட மாட்டார் என மலேசியா கூறியுள்ளது. #ZakirNaik
கோலாலம்பூர்
மும்பையை சேர்ந்த 51 வயதான மதபோதகர் ஜாகீர் நாயக். இவரது மதபோதனைகளுக்கு சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினர் இடையே பெரும் ஆதரவு இருந்து வருகிறது. அதேநேரத்தில் ஜாகீர் நாயக்கின் போதனைகளால் சர்ச்சைகளும் ஏற்பட்டன. இவரது பேச்சுகள் வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டுமாறு செயல்பட்டதாக குற்றம்சாட்டி தேசிய புலனாய்வு முகமை ஜாகீர் நாயக் மீது வழக்குப்பதிவு செய்தது. இது தவிர சட்டவிரோத பணபரிமாற்றம், வெறுப்பு பிரசாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து மலேசியா நாட்டில் தஞ்சமடைந்த ஜாகீர் நாயக், தற்போது வரை இந்தியா திரும்பவில்லை. இவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து வழக்கு விசாரணையில் ஆஜர்படுத்த அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஜாகீர் நாயக் மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதனை மறுத்து ஜாகீர் நாயக் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நான் இந்தியாவுக்கு வருவதாக கூறப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை. எனக்கு எதிராக பாரபட்சமான முறையில் விசாரணை நடக்கிறது. அந்த விசாரணை எப்போது பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேனோ அதுவரையில், இந்தியா வருவதற்கு எந்தவித திட்டமும் இல்லை. விசாரணையில், அரசு நியாயமாக நடந்து கொள்ளும் போது நான் நிச்சயம் தாய் நாடு திரும்புவேன். என அவர் கூறி இருந்தார்.
இந்த நிலையில் மலேசிய தலைநகரான கோலாலம்பூருக்கு தெற்கே புத்ராஜெயா நகரில் அந்நாட்டு பிரதமர் மகாதிர் முகமது நிருபர்களிடம் கூறியதாவது:-
நீண்ட காலம் வரை அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனும் வரை , நாம் அவரை வெளியேற்ற மாட்டோம்.ஏனெனில் அவர் இங்கு நிரந்தர குடியுரிமை பெற்றவர் என தெரிவித்தார்.
, ஜனவரி மாதம் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டது.இரு நாடுகள் ஒப்பந்தபடி அவர் ஒப்படைக்கபட வேண்டுமென்று இந்தியா கோரி இருந்தது.
இந்திய ஹைகமிஷனர் மலேசிய அதிகாரிகளிடம் ஜாகிர் நாயக்கை ஒப்படைப்பது தொடர்பாக பேசி வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சக அதிகாரி நேற்று தெரிவித்து இருந்தார்.
Related Tags :
Next Story






