தாய்லாந்து குகையில் இருந்து 4 சிறுவர்கள் மீட்பு; 10 மணிநேரங்கள் கழித்து அடுத்த ஆபரேஷன்


தாய்லாந்து குகையில் இருந்து 4 சிறுவர்கள் மீட்பு; 10 மணிநேரங்கள் கழித்து அடுத்த ஆபரேஷன்
x
தினத்தந்தி 8 July 2018 4:48 PM GMT (Updated: 8 July 2018 4:48 PM GMT)

தாய்லாந்து குகையில் இருந்து 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. #ThailandCaveRescue


 
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையில் சிக்கிய 12 சிறார்கள் மற்றும் அவர்களுடைய கால்பந்து பயிற்சியாளரை காப்பாற்றும் பணியில் மீட்பு குழு தீவிரமாக இறங்கியுள்ளது. முக்குளிப்பவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டு வருகிறார்கள்.  மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், சிறுவர்களையும், பயிற்சியாளரையும் மீட்க தீவிரமாக திட்டம் வகுக்கப்பட்டது. சிறுவர்கள், பயிற்சியாளர் என 13 பேரும் நல்ல மன வலிமையுடனும், உடல் வலிமையுடனும் காணப்பட்டதால் அவர்களை மீட்க அதிரடியாய் திட்டமிட்டு, டி-டே என்ற ஆபரேஷன் தொடங்கப்பட்டது.

சிறுவர்களையும், பயிற்சியாளரையும் மீட்பதற்காக முக்குளிப்பு வீரர்கள் குகைக்குள் சென்றனர். காலை 10 மணியளவில் சென்ற அவர்கள் மாலை 5:45 மணியளவில் சிறார்களை வெளியே கொண்டுவரத் தொடங்கினர். இப்படி 4 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள். சிறுவர்களுக்கு மீட்பு குழு மருத்துவ முகாமில் முதல்கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவர்கள் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் சியாங்ராய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். குகைக்குள் வழித்துணையாக கயிறு கட்டப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கிடையே 6 சிறார்கள் மீட்கப்பட்டார்கள் என உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கிறது.

மீதம் இருப்பவர்களையும் மீட்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நிலை எதிர்பார்த்ததைவிட சாதகமாக அமைந்தது என மீட்பு குழுவினர் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் அனைவரையும் வெளியே கொண்டுவர வேண்டும், அதற்கான பணிகளை மேற்கொள்கிறோம் என்கிறார்கள். இதற்கிடையே 10 மணிநேரங்கள் கழித்து அடுத்த ஆபரேஷன் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் அடுத்தக்கட்டமாக சிறார்களை வெளியே கொண்டுவர 10 மணி நேரங்கள் தயாராகவேண்டும் என தெரிவிக்கிறார்கள். 50 வெளிநாட்டவர்கள் உள்பட 90 முக்குளிப்பு வீரர்கள் இப்பணியில் இறங்கியுள்ளார் என எனவும் தெரிவிக்கப்படுகிறது.


Next Story