30 லட்சம் பாம்புகளுடன் வாழும் ஒரு வினோத பாம்பு கிராமம்


30 லட்சம்  பாம்புகளுடன் வாழும் ஒரு வினோத பாம்பு கிராமம்
x
தினத்தந்தி 13 July 2018 10:20 AM GMT (Updated: 13 July 2018 10:20 AM GMT)

30 லட்சத்திற்கு அதிகமான பாம்புகளுடன் வாழ்ந்து வரும் கிராம மக்கள்

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள செஜியாங் மாகாணத்தின் கடைக்கோடியில் இருக்கும் குக்கிராமம் சிசிகியாவ். சுமார் 600  பேர் மட்டுமே வாழும் இந்த கிராமத்தில் 30 லட்சத்திற்கு அதிகமான பாம்புகள் வாழ்ந்து வருகின்றன. இந்த கிராமத்தில்  வசிப்பவர்களில்  பெரும்பாலானவர்கள் தங்களது உடல்களின் பல பகுதிகளில் பாம்புக்கடி அடையாளங்களுடன்தான் வாழ்ந்து வருகின்றனர்.

சீனர்களின் அசைவ உணவில் பாம்புக்கறிக்கு முதலிடம் உண்டு. மிகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட இந்த கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. நிலப்பரப்பில் மட்டுமின்றி, இங்குள்ள நீர்நிலைகளிலும் மீன்களைவிட பாம்புகளின் ஆதிக்கம்தான். பசிக்கு உணவாக பயன்படுத்தப்பட்ட பாம்புகள் இங்குள்ள மக்களுக்கு செல்வத்தை அள்ளித்தரும் அமுதசுரபியாக  மாறியுள்ளன. இதனால், மக்கள் இந்த கிராமத்தை 'பாம்பு கிராமம்' என்றே அழைத்து வருகின்றனர். 

இறைச்சியாக மட்டுமின்றி, பல்வேறு கொடிய நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் பாம்புகள் பயன்படுவதால் பாம்புப் பண்ணைகளும், பாம்பு வர்த்தகமும் இங்கு நாளடைவில் அதிக அளவில் பெருகியது.கொடிய நச்சுத்தன்மை உள்ள பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷம், அதிகமான விலைக்கு வெளிநாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுவதால்,   வீட்டுக்கு வீடு பாம்பு வளர்ப்பு என்பது குடிசைத்தொழிலாகவே மாறிப்போனது.

இந்த தொழிலுக்கு ஆரம்பத்தில் பிள்ளையார் சுழி போட்டவர் யாங் ஹாங்சாங். இவரை உள்ளூர் மக்கள் "பாம்புகளின் ராஜா" (snake king) என்று  அழைத்து மகிழ்கின்றனர். 1970-ம் ஆண்டுவாக்கில் முதன்முதலாக பாம்பு பண்ணையை ஏற்படுத்தியவர் இவர். பிற்காலத்தில் மிகப்பெரிய பாம்பு பண்ணையின் அதிபராக மாறினார்.

மனிதர்களுக்கான பிரச்சினைகள் பெருகப்பெருக சிவப்பு கட்டுவிரியன், கருநாகம் உள்ளிட்ட பாம்பு விஷத்துக்கான மருந்து நிறுவனங்களின் தேவைகளும் பெருகின. விளைவு?  சிசிகியாவ் கிராமம் இன்று செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கிறது. ஆண், பெண், குழந்தைகள் என ஒட்டுமொத்த கிராம மக்களும் இதே தொழிலில் ஊறிப்போய் கிடக்கின்றனர். கூடவே உடல் முழுவதும் பாம்புகளின் பாசத்தீண்டல்களின் அடையாளமாக கடிபட்ட காயங்களும் அனைவரிடமும் காணப்படுகிறது.

ஆண்டுக்கு சுமார் 2 டன் எடைக்கு பாம்பு விற்றால் போதும் 4 லட்சம் யுவான்கள் வரை பணம் சம்பாதிக்க முடியும் என்பதால் இங்குள்ளவர்கள் சுமார் 30 லட்சம் பாம்புகளுடன் இரவும், பகலும் வாழ்ந்து வருகின்றனர்.இங்குள்ள பண்ணைகளில் சேகரிக்கப்படும் கொடிய பாம்புகளின் விஷம் உறைய வைக்கப்பட்டு, பொடியாக்கி தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் பாம்புகள் பயன்படுத்தப்படுகிறது. பாம்பின் உடல் ஊறிய  ஒயினுக்கும் அங்கே கடும் கிராக்கி நிலவுகிறதாம். 



Next Story