

* பின்லாந்து நாட்டின் ஹெல்சிங்கி நகரில் நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் சமீபத்தில் சந்தித்து பேசியது அமெரிக்காவில் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நடத்துவதற்கு புதினை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்து உள்ளார்.
* பெரு நாட்டில் ஊழலை ஒழிக்கக்கோரி பொதுமக்கள் எலிகள் மற்றும் கழுகுகளின் உருவப்பொம்மைகளை ஏந்திச்சென்று வீதிகளில் வினோத போராட்டம் நடத்தினர்.
* உள்நாட்டுப்போர் நடந்து வருகிற சிரியாவில், போவா, கப்ரயா நகரங்களில் இருந்து கடந்த சில நாட்களில் 7 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக வெளியேறி உள்ளனர்.
* சிங்கப்பூரில் அந்த நாட்டின் பிரதமர் லீ சியன் லூங் உள்பட 15 லட்சம் பேரின் தனிப்பட்ட மருத்துவ அறிக்கைகளை இணைய தளங்களில் ஹேக்கர்கள் திருட்டுத்தனமாக புகுந்து திருடிச்சென்று விட்டதாக புகார் எழுந்து உள்ளது. இந்த இணையதள திருட்டு சம்பவம், அங்கு இதுவரை நடைபெறாத ஒன்று.
* ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் எடுக்கும் பணியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள ஆஸ்திரேலியர் நீல் பிரகாஷ், தற்போது துருக்கியில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரை ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்துமாறு, அந்த நாட்டு அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் துருக்கி கோர்ட்டு, அதை ஏற்க மறுத்து விட்டது.