போராட்டக்களத்தில் புன்னகைப் பூக்கள்


போராட்டக்களத்தில் புன்னகைப் பூக்கள்
x
தினத்தந்தி 22 July 2018 8:10 AM GMT (Updated: 22 July 2018 8:10 AM GMT)

சவுதி அரேபியா, பணக்கார நாடுகளுள் ஒன்றாக திகழ்கிறது. ஆனால் அங்கு பெண்களின் வாழ்க்கைத்தரம் அவ்வளவு சிறப்பாக இல்லை.

அடிப்படை உரிமைகள் ஒவ்வொன்றிற்காகவும் பெண்கள் போராட வேண்டியிருக்கிறது. அங்கு பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை சமீபத்தில்தான் நீக்கப்பட்டது. அதுபோல் மறுக்கப்பட்ட உரிமைகளை, நிறைய பெண்கள் போராடி பெற்றிருக்கிறார்கள். அப்படி போராடி தாங்கள் நினைத்ததை சாதித்து காட்டிய சில பெண்களை பற்றி பார்ப்போம்.

சோமாயா: இவர் பத்திரிகை ஆசிரியர். தனது பணியை செய்வதற்கு இவர் சந்தித்த சவால்கள் ஏராளம். ‘‘எங்கள் நாட்டில் பெண்கள் மூச்சு விடக்கூட பயப்படுவார்கள். அவர்களது சின்னச் சின்ன ஆசைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். எதற்குதான் போராட வேண்டும் என்ற நியதியே இல்லாமல் எங்கள் வாழ்க்கையே போர்க்களமாக அமைந்துவிட்டது. நிறைய கட்டுப் பாடுகள். அவைகளை மீறினால் நடுத்தெருவில் நிற்க வைத்து சவுக்கடி கொடுப்பார்கள். காவல் துறையின் வன்முறை, அடக்குமுறை களை எல்லாம் மீறிதான் எனது துறைக்குள் என் பணிகளை நான் செய்து கொண்டிருக்கிறேன்.

என்னதான் இது பணக்கார நாடாக இருந்தாலும் பெண்களுக்கு சாதகமான நாடாக இல்லை. பிறந்ததில் இருந்து படிப்பு, விளையாட்டு என எல்லாவற்றிற்கும் தடை ஏற்படுத்தப் படுகிறது. நமக்கென்று ஒரு தனி கலாசாரம் தேவைதான். அதற்காக கட்டுப்பாடு என்ற பெயரில் பெண் களின் வளர்ச்சியை தடுக்கும் நாடு எப்படி வளர்ச்சி பெறும். மற்ற நாடு களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது இங்கு பெண்கள் பின் தங்கிய நிலையில்தான் இருக்கிறார்கள். சுயமாக சிந்திக்கக்கூட உரிமை இல்லை. மறைக்கப்பட்டது எங்களின் அழகு மட்டுமல்ல. அறிவும், வளர்ச்சியும், சந்தோஷமும் கூட தான். நாங்கள் எல்லாம் பணக்கார பெண்கள்தான். ஆனால் எங்கள் பிறப்புரிமையை ஒருபோதும் நாங்கள் அனுபவித்ததில்லை. எங்களுக் கென்று ஒரு நிலையான வாழ்க்கை முறை இல்லை. எதிர்கால திட்டங்கள் எதுவும் இல்லை. பெண்களின் அறிவு வளர்ச்சி எப்படி கலாசார சீரழிவிற்கு காரணமாகும்? அறிவு வளர்ச்சி பெற்ற பெண்களை கொண்ட நாடுகள் அழிந்தா போய்விட்டது?

எனக்கு சிறுவயதிலேயே படிக்கவும், எழுதவும் ரொம்ப பிடிக்கும். அது கொடுத்த ஊக்கம் காரணமாக ‘சவுதி கெஜட்’ என்ற நாளிதழில் ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். இந்த நிலையை எட்டுவதற்கு பல போராட்டங்களை கடந்து வந்திருக்கிறேன். சிறுவயதில் நூலகம் சென்று படிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தனியாக சூப்பர் மார்க்கெட் சென்றதற்காக கடுமையாக தண்டிக்கப்பட்டேன். ‘தனியாக செல்வதற்கு எனக்கு சுதந்திரம் இல்லையா?’ என்று கேட்டால், கலாசாரத்தை மீறுவதாக சொல்வார்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் பத்திரிகைகளின் பக்கங்களை கருப்பு மை அடித்துவிட்டுதான் விற்பனை செய்வார்கள். இது நல்லது? இது கெட்டது என்று தீர்மானிக்க இரண்டுமே நம் எதிரில் இருக்க வேண்டும். யாரோ ஒருவர் சொல்வதை நம் மனது ஏற்காது. முதலில் பத்திரிகை ஆசிரியர் ஆவதற்கு இருந்து வந்த தடைகளை உடைத்தெறிந்தேன். பத்திரிகை ஆசிரியர் ஆனதும் முதல் வேலையாக பல பெண்களை பணியில் அமர்த்தினேன். இப்போது என்னோடு 20 பெண்கள் வேலை பார்க்கிறார்கள். ஆண்கள் மூன்று பேர் மட்டுமே இருக்கிறார்கள்.

சவுதி அரேபியாவை பொருத்தவரை இன்னும் பல மாற்றங்கள் உருவாக வேண்டும். அதற்காக பெண்கள் அமைப்பு ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளேன். என்னை போல உரிமைக்காக போராடிக் கொண்டி ருக்கும் பெண்களுக்கு துணை நிற்பேன். வாழ்க்கை என்பது உயிருடன் இருப்பதல்ல. உணர்வுடன் இருப்பது. ஏன் இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கிறீர்கள் என்று கேட்டால், ‘தங்களை போல பெண்கள் மீது அக்கறை கொண்டவர்கள் யாரும் இல்லை. மதிப்பவர்கள் யாரும் இல்லை. நம் கலாசாரத்தை காப்பாற்ற மேற்கொள்ளும் சில விதிமுறைகள் பெண்களை எங்களுக்கு எதிராக சிந்திக்க வைக்கிறது’ என்று பதில் சொல்கிறார்கள். பெண்களின் அறிவு வளர்ச்சியை முடக்குவது கூட கலாசாரமா? அதை தாண்டிவர தினம் தினம் போராட வேண்டுமா?..” என்று கேட்கிறார், சோமாயா.

மனல் அல் ஷரீப்: கார் ஓட்டியதற்காக சிறை சென்றவர் இவர். சில மாதங்களுக்கு முன்பு வரை, வீட்டில் பல கார்கள் இருந்தாலும் பெண்கள் அவசரத் திற்கு அதை ஓட்டிக்கொண்டு வெளியே செல்ல முடியாது. ஆண்கள் யாராவது வந்து அழைத்து செல்ல வேண்டும். இந்த நிலைமையை பொறுத்துக்கொள்ள முடியாமல் மனல் அல் ஷரீப் கார் ஓட்ட பழகினார். மற்ற நாடுகளில் பெண்கள் விமானம் ஓட்டுகிறார்கள். ஆனால் கார் ஓட்டியதற்காக ஷரீப் குற்றவாளியாக் கப்பட்டார்.

அந்த சமயத்தில் ‘ஒரு பெண் எப்படி கார் ஓட்டலாம்? இது நம் கலாசாரத்திற்கு எதிரானது’ என்றார்கள். அதற்கு ஷரீப், ‘என் வசதிக்காக நான் கார் ஓட்டியது குற்றமா? இதனால் என்ன கலாசார சீரழிவு வந்துவிடப்போகிறது?’ என்று கேட்டார். அவ்வ ளவுதான். ‘கார் ஓட்டியதோடு அல்லாமல் நீதிமன்றத் தையே எதிர்த்து பேசுகிறாயா? உன்னை போன்ற பெண்கள் சமூகத்திற்கே கேடு’ என்று சொல்லி, அவரையும், அவருடைய குடும்பத் தினர் அத்தனை பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார் கள். அவருடைய தந்தை சவுதி அரசருக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார். அதில், ‘அவள் சின்னப் பெண். தெரியாமல் தவறு செய்துவிட்டாள். இனி ஒருபோதும் அவள் கார் ஓட்டாதபடி பார்த்துக் கொள்கிறேன்’ என்று உருக்கமாக வேண்டினார். இதையடுத்து ‘இனி அந்தப்பெண் காரை கூட தொடக்கூடாது’ என்ற நிபந்தனையில் விடுவிக்கப்பட்டார். இன்று பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்த கட்டுப்பாடு தளர்த்தப் பட்டுவிட்டது.

சமர் பதாவி: இவரும் கார் ஓட்டு வதற்கு ஆசைப்ப ட்டவர். ‘எப்படியாவது கார் ஓட்டியே தீரு வேன்’ என்ற பிடிவாத த்தால் தந்தையின் எதிர்ப்பை சம்பாதி த்தார். கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை கண்டித்து போராட்டத்தையும் முன்னெடுத்து சென்றார். ‘கலாசார சீர்கேட்டிற்கு வழிவகுக்கிறாள்’ என்று குற்றம்சாட்டி சிறையில் அடைத்தார்கள். வெளியே வந்த பிறகும் பதாவி போராட்டத்தை நிறுத்தவில்லை. ‘வுமன் டூ டிரைவ்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். அதில் பல பெண்கள் இணைந்தார்கள். அதை தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடினார். பெண்களுக்கு வாக்குரிமை என்ற கோரிக்கையுடன் போராட்டத்தை தீவிரப் படுத்தினார். அதில் வெற்றியும் பெற்றார். இவரை போன்றவர்களின் போராட்டமே அவர்களுக்கு வாழ்வுரிமையை தந்துகொண்டிரு க்கிறது. 

Next Story