

ஜகர்த்தா,
இந்தோனேஷியாவின் லம்போக் தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.
சுற்றுலா தளம் பாலிக்கு சற்று தொலைவில் இந்த தீவு அமைந்துள்ளது. இந்நிலநடுக்கத்தின் மையம் லேலாங்கென் பகுதிக்கு தென்மேற்கே 1.4 கிலோ மீட்டர் தொலைவில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் மஞ்சள் நிற எச்சரிக்கை (தொடக்க நிலை எச்சரிக்கை) வெளியிட்டு உள்ளனர். இந்த கடும் நிலநடுக்கத்தினால் சிலருக்கு காயம் ஏற்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது.
இந்தோனேஷியா தீவு பசிபிக் பெருங்கடலின் ரிங் ஆப் ஃபைர் எனப்படும் பகுதியில் அமைந்துள்ளது. இது எரிமலைகள் அமைந்த வளைவு பகுதியில் உள்ளதனால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
சுமத்ரா பகுதியில் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட 9.1 என்ற அளவிலான கடும் நிலநடுக்கத்தினை அடுத்து சுனாமி ஏற்பட்டது. இதனால் பல்வேறு நாடுகளிலும் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியாகினர்.