பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்பது எப்போது?

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்–இ–இன்சாப் (பி.டி.ஐ.) கட்சி 115 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வந்து உள்ளது.
இஸ்லாமாபாத்,
கூட்டணி அரசு அமைப்பதற்கு சிறிய கட்சிகளுடன் தெஹ்ரீக்–இ–இன்சாப் கட்சி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
இம்ரான்கான் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜஹாங்கிர் கான் தாரின், சுயேச்சை எம்.பி.க்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறார். 6 இடங்களைப் பெற்று உள்ள முத்தாஹிடா காமி மூவ்மெண்ட் பாகிஸ்தான் (எம்.கியூ.எம்.பி.) கட்சியுடனும் அவர் பேசி உள்ளார்.
ஜி.டி.ஏ., எம்.கியூ.எம்.பி, பி.எம்.எல்.–கியூ, அவாமி முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை இம்ரான் கான் கட்சி பெற்று விடும் என அந்தக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அப்போது அந்தக் கட்சிக்கு மொத்தம் 122 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்து விடும். ஆக ஆட்சி அமைக்க இன்னும் 15 எம்.பி.க்களின் ஆதரவை அந்த கட்சி பெற வேண்டிய நிலையில் உள்ளது.
சுயேச்சை எம்.பி.க்களில் சிலரது ஆதரவையும் திரட்டும் சூழல் இருக்கிறது.
இந்த நிலையில், இம்ரான்கான், பாகிஸ்தான் சுதந்திர தினத்துக்குள் (ஆகஸ்டு மாதம் 14–ந் தேதி) பிரதமராக பதவி ஏற்பார் என அவரது கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இது பற்றி இம்ரான்கான் கட்சியின் மூத்த தலைவர் நயீனுல் ஹக் கூறும்போது, ‘‘தேவையான எம்.பி.க்களின் ஆதரவை பெற்று விடுவோம். எனவே இம்ரான் கான் ஆகஸ்டு மாதம் 14–ந் தேதிக்குள் பிரதமர் பதவி ஏற்பார்’’ என குறிப்பிட்டார்.






