

காபூல்,
பாகிஸ்தான் எல்லையையொட்டிய பாக்தியா மாகாணத்தின் கார்தேஷ் பகுதியில் மசுதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரண்டு தற்கொலை பயங்கரவாதிகள் தங்கள் உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 20 பேர் உயிரிழந்தனர் என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரது நிலை மோசமாக உள்ளது எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளார்கள். 70 பேர் வரையில் காயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே இத்தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு எற்கவில்லை.
ஆப்கானிஸ்தானின் நகர்புறங்களில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகிறது. ஐ.எஸ். மற்றும் தலிபான் பயங்கரவாத இயக்கங்கள் தாக்க்குதலை முன்னெடுத்து வருகிறது. பேச்சுவார்த்தை தொடர்பாக அரசு கொடுத்துவரும் அழுத்தம் காரணமாக தலிபான் பயங்கரவாத இயக்கம் தாக்குதல் எதற்கு பொறுப்பு கூறுவது கிடையாது. இருப்பினும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தொடர்ந்து கொடூரமான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.