‘பெப்சி’ நிறுவன தலைமை பொறுப்பில் இருந்து இந்திரா நூயி விலகுகிறார்


‘பெப்சி’ நிறுவன தலைமை பொறுப்பில் இருந்து இந்திரா நூயி விலகுகிறார்
x
தினத்தந்தி 6 Aug 2018 10:30 PM GMT (Updated: 6 Aug 2018 8:56 PM GMT)

பெப்சி நிறுவன தலைமை பொறுப்பில் இருந்து இந்திரா நூயி விலகுகிறார். இவர் சென்னையில் பிறந்தவர் ஆவார்.

நியூயார்க்,

அமெரிக்க குளிர்பான நிறுவனமான ‘பெப்சிகோ’வின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் இந்திரா நூயி. இந்திய வம்சாவளி பெண்மணியான இவர், சென்னையில் பிறந்தவர். 24 ஆண்டுகளாக பெப்சிகோ நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், அக்டோபர் 3-ந் தேதி, இந்திரா நூயி அப்பொறுப்பில் இருந்து விலகுகிறார். இருப்பினும், தலைவர் பொறுப்பில் அடுத்த ஆண்டு தொடக்கம் வரை நீடிப்பார். புதிய தலைமை செயல் அதிகாரியாக ‘பெப்சிகோ’ தலைவர் ரமோன் லகார்ட்டாவை இயக்குனர்கள் குழு தேர்வு செய்துள்ளது. இவர், 22 ஆண்டுகளாக பெப்சிகோ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

தனது விலகல் குறித்து இந்திரா நூயி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “இந்தியாவில் வளர்ந்த நான், இவ்வளவு பெரிய நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. கடந்த 12 ஆண்டுகளில் நான் செய்த பணிகளை நினைத்து பெருமைப்படுகிறேன். பெப்சிகோ நிறுவனத்தின் சிறப்பான நாட்கள் இன்னும் வரவில்லை என்றே கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.

62 வயதான இந்திரா நூயி, உலகின் சக்தி வாய்ந்த பெண் தொழில் அதிபர்கள் பட்டியலில் 2-ம் இடத்தை பிடித்தவர். உலகிலேயே அதிக சம்பளம் பெறும் பெண் நிர்வாகிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தவர் ஆவார்.

Next Story