சீன பெருஞ்சுவர் எங்குள்ளது? குரோர்பதி நிகழ்ச்சியில் 2 லைப்லைன்களை பயன்படுத்திய பெண் போட்டியாளர்
குரோர்பதி நிகழ்ச்சியில் சீன பெருஞ்சுவர் எங்குள்ளது என்ற கேள்விக்கு 2 முறை லைப்லைன்களை பயன்படுத்திய பெண் போட்டியாளருக்கு டுவிட்டரில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவில் நடத்தப்படும் கோன் பனேகா குரோர்பதி எனப்படும் கோடீசுவரராகும் நிகழ்ச்சி போன்று துருக்கி நாட்டில் மில்லியனராக யார் விரும்புகிறீர்கள்? என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் சூ ஆய்ஹான் (வயது 26) என்ற பெண் போட்டியாளர் கலந்து கொண்டார். இஸ்தான்புல் நகரை சேர்ந்த இவர் பொருளாதார பட்டப்படிப்பினை படித்தவர்.
இவரிடம் நிகழ்ச்சியில் சீன பெருஞ்சுவர் எங்குள்ளது? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்க அவருக்கு சீனா, இந்தியா, தென்கொரியா மற்றும் ஜப்பான் என நான்கு விடைகள் தரப்பட்டன. சற்று திகைத்த அவர், பதில் எனக்கு தெரியும். ஆனால் உறுதிப்படுத்த பார்வையாளர்களின் லைப்லைனை பயன்படுத்த விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
எனினும் இதில், 51 சதவீதம் பேரே சீனா என பதில் அளித்து உள்ளனர். 4ல் ஒரு பங்கினர் இந்தியாவை தேர்வு செய்துள்ளனர்.
இதனால் 2வது லைப்லைன அவர் பயன்படுத்தும் முடிவுக்கு வந்துள்ளார். இந்த முறை தனது நண்பருக்கு தொலைபேசியில் பேசியுள்ளார். அவர் சீனா என உறுதிப்பட கூறியுள்ளார்.
இதனால் வெளியேறும் சுற்றில் இருந்து அவர் தப்பினார். ஆனால் எளிய ஒரு கேள்விக்கு பதிலளிக்க தவறிய அவரை டுவிட்டரில் பலர் விமர்சித்து உள்ளனர்.
அதற்கு அவர், எப்பொழுது தேவையோ அப்பொழுது எனது லைப்லைன்களை நான் பயன்படுத்துவேன் என பதிலளித்து உள்ளார். ஆனால் அடுத்த கேள்விக்கு தவறான பதில் அளித்து போட்டியில் இருந்து வெளியேறினார். அதில், புகழ் பெற்ற துருக்கி பாடலின் இசையமைப்பாளர் யார்? என கேட்கப்பட்டு இருந்தது.
சீனாவின் அடையாளம் ஆக திகழும் சீன பெருஞ்சுவர் கிறிஸ்து பிறப்புக்கு முன் கட்டப்பட்டது. இது தனி சுவராக இல்லாமல் எண்ணற்ற சுவர்களின் தொடர்ச்சியாக 8 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைந்துள்ளது.