நடத்தை விதிகள் மீறல்: தேர்தல் கமி‌ஷனிடம் மன்னிப்பு கேட்டார், இம்ரான்கான்


நடத்தை விதிகள் மீறல்: தேர்தல் கமி‌ஷனிடம் மன்னிப்பு கேட்டார், இம்ரான்கான்
x
தினத்தந்தி 10 Aug 2018 10:45 PM GMT (Updated: 10 Aug 2018 9:40 PM GMT)

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான் 5 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இஸ்லாமாபாத்,

இம்ரான்கான் வெற்றி பெற்ற என்.ஏ. 53 (இஸ்லாமாபாத்), என்.ஏ. 131 (லாகூர்) ஆகிய 2 தொகுதிகளின் முடிவை தேர்தல் கமி‌ஷன் நிறுத்தி வைத்து உள்ளது.

இந்த நிலையில், இஸ்லாமாபாத் தொகுதியில் வாக்கு அளித்த இம்ரான்கான் திரைக்கு பின்னால் செல்லாமல், தேர்தல் அதிகாரியின் மேஜை மீது ஓட்டுச்சீட்டில் முத்திரை குத்தியது, வாக்கு ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை மீறியது என்பதால், தேர்தல் கமி‌ஷன் தானாக முன் வந்து விசாரணை நடத்துகிறது.

நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது இம்ரான்கான் வக்கீல் பாபர் அவான் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவர், ‘‘இம்ரான்கான் வேண்டுமென்றே வாக்கு ரகசியத்தை மீறவில்லை; அவர் ஓட்டு போட்டதை அனுமதியின்றி படம் பிடித்து விட்டனர். ரகசியமாக வாக்கு பதிவு செய்வதற்காக அமைக்கப்பட்டு இருந்த திரை, வாக்குச்சாவடியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் கீழே விழுந்து விட்டது’’ என்று கூறினார்.

ஆனால் அதை தலைமை தேர்தல் கமி‌ஷனர் சர்தார் முகமது ராசா தலைமையிலான 4 உறுப்பினர்கள் அமர்வு நிராகரித்தது. இது தொடர்பாக இம்ரான்கான் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி இம்ரான்கான் நேற்று எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு, தேர்தல் கமி‌ஷனில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தேர்தல் கமி‌ஷன் தீர்ப்பை ஒத்திவைத்து உள்ளது.


Next Story