மேலும் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி சீனப்பொருட்களுக்கு வரி அமெரிக்கா அதிரடி


மேலும் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி சீனப்பொருட்களுக்கு வரி அமெரிக்கா அதிரடி
x
தினத்தந்தி 23 Aug 2018 11:45 PM GMT (Updated: 23 Aug 2018 8:41 PM GMT)

சீனாவால் ஏற்படுகிற வர்த்தக பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்து வருகிறது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்கள் மீது இதற்கு பதிலடி கொடுக்கிற விதத்தில்  சீனாவும் கூடுதல் வரி விதித்து வருகிறது.

இவ்விரு வல்லரசு நாடுகள் இடையே ஏற்பட்டு உள்ள வர்த்தக போர் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா நேற்று அதிரடியாக கூடுதல் வரி விதித்து உள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 50 பில்லியன் டாலர் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா முதலில் அறிவித்தது. அதன்படி ஏற்கனவே 34 பில்லியன் டாலர் பொருட்கள் மீது கூடுதல் வரியை விதித்து விட்டது. மீதி 16 பில்லியன் டாலர் பொருட்களுக்குத்தான் இப்போது கூடுதல் வரி விதித்து உள்ளது.

அமெரிக்கா சீனப்பொருட்கள்மீது எந்த அளவுக்கு கூடுதல் வரி விதிக்கிறதோ, அதே அளவுக்கு அந்த நாட்டின் பொருட்கள் மீது நாங்கள் வரி விதிப்போம் என்று சீனா ஏற்கனவே கூறி இருப்பது நினைவுகூரத்தக்கது.

இது பற்றி அமெரிக்க வர்த்தக மந்திரி வில்பர் ரோஸ் கருத்து தெரிவிக்கையில், ‘‘அமெரிக்காவுக்கு பதிலடி தருகிற விதத்தில் அதே அளவுக்கு சீனாவால் கூடுதல் வரி விதிக்க முடியாது. அவர்கள் சிறிதளவு வரி விதிப்பார்கள். முடிவில், அவர்களை விட நாங்கள் தான் கூடுதல் வரி விதிக்க முடியும். இது அவர்களுக்கும் தெரியும்’’ என குறிப்பிட்டார்.


Next Story