ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு இதுவரை 8 பேர் பலி
ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹொக்கைடோ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். #JapanEarthquake
டோக்கியோ,
ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் ஹொக்கைடோ என்னும் தீவு அமைந்துள்ளது. இத்தீவில் இன்று அதிகாலை 3.08 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ள இந்நிலநடுக்கம், சுமார் 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சுமார் 1.9 மில்லியன் மக்கள் வாழும் ஹொக்கைடோ தீவின் தலைநகரான சப்போரோவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே நிலநடுக்கத்தால் இதுவரை 8 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 32-க்கும் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 3 மில்லியன் வீடுகளில் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்துள்ளன.
கடந்த இரு தினங்களாக ஜெபி புயல் ஜப்பான் நாட்டையே புரட்டி போட்டது. இந்நிலையில் ஜெபி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மறைவதற்கு முன்னரே, இன்று காலை ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ஜப்பான் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Related Tags :
Next Story