மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்து டொனால்டு டிரம்புக்கு கிம் ஜாங் அன் கடிதம்


மீண்டும்  சந்திக்க விருப்பம் தெரிவித்து டொனால்டு டிரம்புக்கு கிம் ஜாங் அன் கடிதம்
x
தினத்தந்தி 11 Sep 2018 1:23 AM GMT (Updated: 11 Sep 2018 2:05 AM GMT)

மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு கிம் ஜாங் அன் கடிதம் எழுதியுள்ளார்.

வாஷிங்டன்,

கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில், இரு துருவங்களாக கருதப்பட்டு வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்துப் பேசியபோது, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற வடகொரியா ஒப்புக்கொண்டது. இதையொட்டி இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தினர்.அந்த ஒப்பந்தத்தில் அணு ஆயுதங்களை வடகொரியா கைவிடுவது தொடர்பாக கூடுதலான தகவல்கள் இல்லை. இருப்பினும், அதன் பின்னர் வடகொரியா இதுவரையில் அணுகுண்டு வெடிக்கவும் இல்லை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தவும் இல்லை.

அதே நேரத்தில் அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான அந்த நாட்டின் நடவடிக்கையில் முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதன் எதிரொலியாகத்தான் சமீபத்தில் அந்த நாட்டுக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ மேற்கொள்ளவிருந்த பயணத்தை ஜனாதிபதி டிரம்ப் ரத்து செய்தார்.

இந்த நிலையில்தான், வடகொரியாவில் நேற்று நடந்த 70-வது ஆண்டு விழா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த விழாவையொட்டிய பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு எப்படி நடைபெறப்போகிறது, வடகொரியா தனது ஆயுத பலத்தை காட்டுமா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடம் பெறச்செய்யுமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு விழா தொடங்கியது. ராணுவ வீரர்கள், வீராங்கனைகள் அணிவகுப்பில் கலந்து கொண்டு வீர நடை போட்டனர்.

அதே நேரத்தில் அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறவில்லை. பிற பாரம்பரிய ஆயுதங்கள், தளவாடங்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தன.அணிவகுப்பை வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், சீன அதிபர் ஜின்பிங்கின் சிறப்புத்தூதர், லி ஜான்சுவுடன் பார்வையிட்டார்.
ராணுவ அணுவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறாதது அமெரிக்காவுக்கு நிம்மதியை அளிப்பதாக அமைந்தது.

இந்நிலையில், டிரம்பிற்கு கிம் ஜாங் அன் கடிதம் எழுதியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் குறிப்பிட்டுள்ளதாவது :-

கிம் ஜாங் அன் அதிபர் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளார். மிகவும் நல்ல விஷயங்களை உள்ளடக்கிய நேர்மறையான கடிதமாக அமைந்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிகைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தின் பிரதான நோக்கம் அதிபருடன் மீண்டும் சந்திப்பை திட்டமிடுவதே ஆகும், இந்த சந்திப்பை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஏற்கெனவே நாங்கள் ஈடுபட தொடங்கிவிட்டோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story