தாகம் தீராத மனிதர்


தாகம் தீராத மனிதர்
x
தினத்தந்தி 14 Sep 2018 4:30 AM GMT (Updated: 13 Sep 2018 11:20 AM GMT)

ஜெர்மனியைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் மார்க் வுப்பென்ஹார்ஸ்ட், ஒரு நாளைக்குக் குறைந்தது 20 லிட்டர் தண்ணீரையாவது குடித்துக் கொண்டிருக்கிறார். இல்லாவிட்டால் அவரது உடல் நீர்ச்சத்தை இழந்து, மரணத்திற்கு அழைத்துச் சென்று விடும் அபாயகரமான சூழல் நிலவுகிறது.

35 வயதாகும் மார்க், அரிய வகை வளர்சிதை மாற்ற நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். 24 மணிநேரமும் இவருக்குத் தாகம் எடுத்துக் கொண்டே இருக்கிறது. தொடர்ச்சியாகத் தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்கிறார்.

அதனால் அசாதாரண அளவில் சிறுநீர் கழித்துக் கொண்டே இருக்கிறார். சிறிது நேரம் தண்ணீர் குடிக்காவிட்டாலும், இவரது உடல் நீர்ச்சத்தை முற்றிலுமாக இழந்து விடுகிறது. சில மணி நேரம் தண்ணீர் குடிக்காவிட்டால் மரணத்தைச் சந்திக்க வேண்டியிருக்குமாம்.

சாதாரண மனிதர்களால் 2 டம்ளர் தண்ணீர் குடித்தால், பல மணி நேரங்களுக்குத் தண்ணீர் குடிக்காமலேயே தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் இவரது உடல் தண்ணீர்ச் சத்தைச் சேமித்து வைப்பதில்லை. சாதாரண மனிதர்களை விடச் சிறுநீரகம் வெகு வேகமாகத் தண்ணீரை வெளியேற்றி விடுகிறது.

ஒரு மணி நேரம் தண்ணீர் குடிக்காவிட்டால் உடல் தண்ணீர்ச் சத்தை இழக்கும், உதடுகள் வெடிக்க ஆரம்பிக்கும். தலைச்சுற்றல் வரும். தண்ணீர் குடிக்காமல் 2 அல்லது 3 நாட்களுக்குப் பிறகு ஏற்படும் பிரச்சினைகள் இவருக்கு ஒரு மணி நேரத்திலேயே ஏற்பட்டு விடுகிறது.

மார்க் பிறக்கும்போதே இந்த நோயுடன்தான் பிறந்தார். குழந்தையாக இருந்தபோது இந்த அளவுக்கு நிலைமை மோசமில்லை. அதோடு நிறைய நண்பர்கள், இவர் இயல்பாக இருப்பதற்கு உதவி செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் நிலைமை மோசமாகி, தண்ணீர் பாட்டில்களுடன் அலைந்து கொண்டிருக்கிறார்.

Next Story